மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்புக்கு தடை நீங்கியது!

Tuesday, November 23, 2010

மதுரை, 24.11.2010.

மாவீரன் முத்துக்குமாருக்கு சிலை அமைப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈழத்தமிழர்களுக்காக இன்னுயிர் நீத்த ஈகி முத்துக்குமாருக்கு தஞ்சை செங்கிப்பட்டியில் சிலை ஒன்றை நிறுவ, கடந்த சூலை மாதம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி விழா நடத்தியது. மாவீரன் முத்துக்குமாரின் சிலையை இளந்தமிழர் இயக்கம் வடிவமைத்து வழங்கியது. இந்நிகழ்வின் போது, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கிய காவல்துறை, மாவீரன் முத்துக்குமாருக்கு சிலை வைக்க அனுமதியளிக்கவில்லை.

இதையடுத்து சிலையை நிறுவ த.தே.பொ.க. சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த அவ்வழக்கில், மாவீரன் முத்துக்குமார் சிலையை நிறுவுவதற்கு விதிக்கப்பட்டிருந்தத் தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சிலையை நிறுவக் கூடாது என அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களை, த.தே.பொ.க. சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் முறியடித்தார்.

இன்று பிற்பகலில் இவ்வாணை கிடைத்ததும், த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதோடு, விரைவில் சிலை நிறுவப்பட்டு திறப்பு விழா நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இவ்வெற்றி த.தே.பொ.க. மற்றும் இளந்தமிழர் இயக்கத் தோழர்களுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல, இன உணர்வாளர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

தி.மு.கவினர் வெறியாட்டம்: இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் அருணபாரதி தாக்கப்பட்டார்!

Tuesday, August 10, 2010

இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் அருணபாரதி தாக்கப்பட்டார்!
தி.மு.கவினர் வெறியாட்டம்!

சென்னை, 11.08.2010.

இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி உள்ளிட்ட மூன்று தோழர்கள் மீது தி.மு.கவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று இரவு 11.30 மணி அளவில், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் அலுவலகம் அமைந்திருந்த சென்னை தியாகராயர் நகர் பகுதியில் பத்திரிக்கை ஊழியர்கள் இருவர் பத்திரிக்கையின் சுவரொட்டிகளை ஒட்ட, தோழர் அருணபாரதி உடன் சென்றிருந்தார்.

அந்தச் சுவரொட்டிகளில் ‘செம்மொழி மாநாடு செய்தது என்ன?’’, ‘இந்தியாவே வெளியேறு’ ஆகிய பத்திரிக்கையில் இடம் பெற்றிருந்த கட்டுரையின் தலைப்புகள் இருந்தன. அப்போது, அங்கு திடீரென வந்த தி.மு.கவினர், ‘தலைவர் கலைஞரின் செம்மொழி மாநாட்டைக் குறை சொல்ல நீங்க யாரு?’ என்று கேள்வி எழுப்பியும் தகாத வார்த்தைகளால் திட்டியும் வம்பு வளர்த்தனர். தோழர் க.அருணபாரதி அவர்களிடம் பதில் கூற முற்பட்டபோது, தோழா;கள் கொண்டு சென்றிருந்த மிதிவண்டியை தூக்கி வீசி சேதப்படுத்தினர். பின்னர் தோழர்கள் நாகராஜ், பாலா ஆகியோரைத் தாக்கியுள்ளனர். தோழர் நாகராஜ் திருப்பித் தாக்க முற்பட்டபோது, அருகே இருந்த மண்வெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்த தி.மு.கவினரில் ஒருவர் அவரை வெட்ட முற்பட்டார். தோழர் அருணபாரதி குறுக்கே புகுந்து அவரைத் தள்ளிவிட்டு தோழர் நாகராஜைக் கொலைவெறித் தாக்குதலில் இருந்து காத்தார்.

இதனால் கோபமுற்ற தி.மு.கவினர், தோழர் அருணபாரதியையும் தாக்கினர். தாக்கிய பின் அக்கும்பல், தமிழர் கண்ணோட்டம் சுவரொட்டிகளைக் கிழித்து எறிந்தது. தி.மு.க தலைவர் கருணாநிதியை விமர்சித்தால் கொலை செய்துவிடுவோம் என்று எச்சரித்தனர். அங்கிருந்து தப்பி வந்த தோழர்கள் மேற்கு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். காவல்துறையினர், முதலில் புகாரை ஏற்பதில் தயக்கம் காட்டினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் உடனடியாகத் தலையிட்டு மேற்கு மாம்பலம் காவல் துறை ஆய்வாளர் திரு. விஸ்வநாத் ஜெயன் அவர்களிடம் பேசிய பின்னர், புகார் பதிவு செய்யப்பட்டது.

மாற்றுக் கருத்துக் கொண்டோர் மீது தாக்குதல் நடத்துவது தி.மு.கவின் வழக்கமாக உள்ளது. தமிழர் கண்ணோட்டம் இதழும் இளந்தமிழர் இயக்கமும் தமிழ்த் தேசிய அரசியலில் சமரசமின்றிப் போராடி வருகின்றன. குறிப்பாக தி.மு.க தலைவர் கருணாநிதியின் தமிழின விரோத நடவடிக்கைகளை எதிர்த்துக் களம் கண்டு வருகின்றன. இதைச் சகித்துக் கொள்ள முடியாத தி.மு.கவினர் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான நடவடிக்கைகள் தி.மு.கவின் தமிழின விரோதப் போக்கை மேலும் அம்பலப்படுத்துமே தவிர, தமிழினத்தில் அக்கட்சிக்கு நற்பெயர் கிடைக்க வழிவகுக்கப் போவதில்லை.

தாக்குதல் நடத்திய கொலை வெறியர்களைத் தமிழக அரசு உடனடியாகக் கைது செய்ய வேண்டும். தி.மு.க தலைமை இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கோர வேண்டும்.

இதுபோன்ற போக்கை தி.மு.கவினர் நிறுத்த வேண்டும். இதுகுறித்த தொடர் பரப்புரைகளில் ஈடுபட்டு தி.மு.கவின் தமிழின விரோத அடியாள் அரசியலை அம்பலப்படுத்தும் பணியை இளந்தமிழர் இயக்கம் முன்னெடுக்க உள்ளது. உலகெங்கும் வாழும் இன உணர்வாளர்கள் இப்பணியில் இளந்தமிழர் இயக்கத்துக்குத் துணை நிற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
ம.செந்தமிழன்
தலைமைக் குழு - இளந்தமிழர் இயக்கம்

துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம்!

Sunday, July 25, 2010

சிங்கள இனவெறி அரசுடன் இணைந்து செயல்படும் ஏர்டெல் தொலைத் தொடர்பு நிறுவனத்தை புறக்கணிக்கும் போராட்டம் சென்னையில் நேற்று(25.07.2010) தொடங்கி வைக்கப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு நடந்த இப்போராட்டத்திற்கு தமிழினப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் அமைப்பாளர் இதழாளர் க.அய்யநாதன் தலைமை தாங்கினார். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் ஐயா. பழ.நெடுமாறன் ஏர்டெல் கைபேசி சிம்கார்டு ஒன்றை உடைத்து வைத்து ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டத்தை துவக்கி வைத்தார். புறக்கணிக்கப்பட்ட ஏர்டெல் கைபேசி சிம்கார்டுகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு முன்பு குவிக்கப்பட்டிருந்தன.

மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், ஏர்டெல் நிறுவனத்தை நாம் புறக்கணிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, இப்போராட்டம் ஒரு துவக்கமே என்றும் வடநாட்டு நிறுவனங்கள் இவ்வாறு செயல்படுவதை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த வே.பாரதி, வீதி தோறும் இப்புறக்கணிப்பை நாங்கள் வலியுறுத்துவோம் என்று பேசினார்.




தொடர்ந்து, பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், தமிழக பெண்கள் செயற்களத்தின் அமைப்பாளர் வழக்கறிஞர் கயல்விழி, இதயக்கனி இதழ் ஆசிரியர் விஜயன், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த சரவணக்குமார், ஓவியர் வீரசந்தானம் ஆகியோர் கலந்து கொண்டு ஏர்டெல் புறக்கணிப்பிற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துப் பேசினார்.


இக்கூட்டத்தின் வாயிலாக, ஏர்டெல் கைபேசி சேவைகளை புறக்கணிக்க விரும்புவோர் அந்த சிம்கார்டுகளை வரும் செப்டம்பர் 27 திலீபன் நினைவு நாளுக்குள் அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஏர்டெல் சேவைகளைப் புறக்கணிப்போம் - தமிழின உணர்வாளர்கள் சூளுரை!

Friday, June 11, 2010

ஈழத்தில் தமிழினத்தைப் படுகொலை செய்த சிறிலங்க அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அங்கு செல்பேசி சேவையை நடத்திவரும் ஏர்டெல் நிறுவனத்தின் சேவையை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரும் பிரகடனத்தை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு. பழ.நெடுமாறன் வெளியிட்டார்.

ஏர்டெல் நிறுவனத்தின் செல்பேசி சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் புறக்கணிக்கக் கோரும் போராட்டத்தை வலியுறுத்தி சென்னை, சைதாப்பேட்டையில் நேற்று(11.06.2010) மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மே 17 இயக்கம், தமிழினப் பாதுகாப்புக் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பழ.நெடுமாறன், ஏர்டெல் நிறுவன சேவைகளை ஏன் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதை விளக்கினார்.

“தமிழினத்தின் துயரத்தைப் பொருட்படுத்தாமல், சிங்கள இனவெறி அரசால் இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு, சின்னாபின்னமாகி சிதறடிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு நியாயம் தேடாமல், சிங்கள இனவெறியன் ராஜபக்சவுடன் கை குலுக்கி தங்கள் வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்ளச் சென்ற ஃபிக்கி அமைப்பின் நடவடிக்கையை எதிர்க்கும் வகையில், அந்த அமைப்பின் தலைவராக உள்ள ராஜன் பார்த்தி மிட்டல் தலைமை செயல் அலுவலராக இருக்கும் ஏர்டெல் நிறுவனத்தின் செல்பேசி, அகண்ட அலைவரிசை, இணையத் தளத் தொடர்பு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.

இதேபோல், சிறிலங்க சிங்கள இனவெறி அரசுடன் சேர்ந்துகொண்டு இலங்கைக்குச் சென்று வணிகம் செய்யும் நிறுவனங்கள் எதுவாயினும், அந்நிறுவனங்களின் பொருட்களை தமிழர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்க வேண்டும்.

ஏர்டெல் சேவையை பயன்படுத்தும் தமிழர்கள், அதைப் புறக்கணித்துவிட்டு வேறு சேவைக்கு மாறிட வேண்டு்ம. அதனை சக தமிழர்களிடம் கூறி, அவர்களையும் ஏர்டெல் சேவையை புறக்கணிக்குமாறு வலியுறுத்த வேண்டும்” என்று நெடுமாறன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலர் விடுதலை இராசேந்நதிரன், டப்ளினில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தால் போர்க் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒரு நாட்டுடன் இணைந்து வணிகம் செய்வது மட்டுமின்றி, அந்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த அங்கு திரைப்பட விழாவையும், வணிக மாநாட்டையும் நடத்தும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் நடவடிக்கைக்கு தக்க பாடம் புகட்ட, இப்படிப்பட்ட புறக்கணிப்பு போராட்டங்கள் அவசியம் என்றார்.

ஏர்டெல் நிறுவனத்தின் செல்பேசி சேவையை புறக்கணிக்குமாறு நடத்தப்படும் இந்தப் போராட்டத்திற்குப் பிறகும், இலங்கையில் தனது சேவையை ஏர்டெல் தொடருமானால், அந்த நிறுவனத்தின் விளம்பரங்களை நீக்கும் போராட்டத்தில் தமிழர்கள் ஈடுபட வேண்டும் என்று தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் தோழர் தியாகு கூறினார்.

தமிழர்களின் நலனைப் புறக்கணித்துவிட்டு இந்திய பெருநிறுவனங்கள் இலாப நோக்கை மட்டுமே கருத்தில் கொண்டு நீண்ட காலமாகவே செயல்பட்டு வருகிறது என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற இதழாளர் கா.அய்யநாதன், இலங்கையில் போர் நடந்தபோதே 2008ஆம் ஆண்டில் அங்கு தனது சேல்பேசி சேவையை ஏர்டெல் துவக்க அனுமதி பெற்றதற்குக் காரணம், அது தமிழர்களுக்கு எதிரான போருக்கு சிறிலங்க அரசிற்கு நிதியுதவி செய்ததே என்று செய்தி வந்ததை சுட்டிக்காட்டினார்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் பேசுகையில், 2000வது ஆண்டில் இந்தியாவிற்கும், சிறிலங்க அரசிற்கும் இடையே கையெழுத்தான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு்ப பிறகு இந்திய நிறுவனங்கள் பெருமளவிற்கு இலாபமடைந்தன. அதன் பிறகு சிறிலங்காவை நோக்கி பல நிறுவனங்கள் படையெடுத்தன. அங்குள்ள வணிக வாய்ப்புகளால் உற்சாகமுற்ற இந்திய நிறுவனங்கள் சிறிலங்க அரசின் போருக்கும் மறைமுகமாக உதவின. அந்த அடிப்படையில்தான் ஏர்டெல் அங்கு தனது சேவையைத் துவங்க அனுமதி பெற்றது. அப்போதும் ஃபிக்கி அமைப்பு வணிக உறவுகளுக்கு பாலமாக இருந்தது, இப்போதும் அதுவே முன்னணியில் இருந்து செயல்படுகிறது என்று கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, இன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்யப்படும் என்றும், கருப்பு ஜூலை தினமான 25ஆம் தேதியன்று ஏர்டெல் செல்பேசியின் சிம் கார்டுகளை உடைத்து அந்த நிறுவனத்திற்கு அனுப்பப்படும் என்று கூறினார்.

வட இந்தியப் பொருளாதார புறக்கணிப்புப் போராட்டம் நடத்துவோம்!

Thursday, June 3, 2010


இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பின் (ஃபிக்கி) ஆதரவுடன் இந்திய சர்வதேச திரைப்படக் கழகத்தின் (ஐஃபா) விருது விழா நடந்தால், அதில் கலந்துகொள்ளும் நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் துவங்கும் என்று தமிழ் இன உணர்வாளர் அமைப்புகள் எச்சரித்துள்ளன.

நேற்று மாலை கொழும்புவிலுள்ள சுகந்ததாச அரங்கில் இந்திய சர்வதேச திரைப்படக் கழகத்தின் (India International film Academy - IIFA) விருது வழங்கு விழா நடைபெற்றது. இந்த விழாவைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு (ஃபிக்கி) ஏற்பாடு செய்துள்ள உலக வர்த்தக மாநாடு (Global Business Conclave) நடைபெறுகிறது. மூன்றாவது நாள் பாலிவுட் நட்சத்திரங்களைக் கொண்ட கிரிக்கெட் அணிக்கும், சிறிலங்க கிரிக்கெட் அணிக்கும் இடையே ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது.

கொழும்புவில் நடைபெறும் இந்த விழாவை புறக்கணிக்குமாறு தமிழர் அமைப்புகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இவ்விழாவிற்கான தூதராக பணியாற்றிவந்த இந்தி நடிகர் அமிதாப் பச்சன் விலகினார். அவருடைய மகன் அபிஷேக் பச்சன், அவருடைய மனைவி ஐய்வர்யா ராய், சாருக்கான் உள்ளிட்ட இந்தி திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தமிழர்களின் உணர்வுகளை மதித்து விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த விழாவிற்கும், அதனை நடத்த ஆதரவளித்துவரும் ஃபிக்கி அமைப்பையும் கடுமையாக எதிர்த்துவரும் தமிழர் அமைப்புகள் சார்பில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று(03.06.2010) காலை நடைபெற்றது.

மே17 இயக்கம் சார்பில் இந்த செய்தியாளர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில், பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலர் விடுதலை இராசேந்திரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் தோழர் தியாகு, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, இதழாளர் கா.அய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தமிழர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், சிறிலங்க அரசு நடத்திய தமிழினப் படுகொலையை மறைக்கும் திட்டத்துடன் நடைபெறும் ஐஃபா திரைப்பட விழாவும், நாளை உலக வர்த்தக மாநாடும் கொழும்புவில் நடைபெறுமானால், அந்த விழாவில் பங்கேற்கும் நடிகர், நடிகைகளையும், அவர்கள் நடிக்கும் திரைப்படங்களையும் தென்னகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அறிவித்திருப்பதைப் போல, உலக வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கையில் வர்த்தகம் செய்யச் செல்லும் நிறுவனங்களின் பொருட்களை தமிழர்கள் புறக்கணிக்கும் நிலை ஏற்படும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
கொழும்புவில் உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டை நடத்தி அதன் மூலம் இந்திய நிறுவனங்கள் அங்கே முதலீடு செய்து வணிகம் செய்ய முற்படுவது இலாப நோக்கை மட்டுமே கொண்டு செயல்படுவதாகும் என்றும், இதில் நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility) என்ன ஆனது என்று இதழாளர் க.அய்யநாதன் கேள்வி எழுப்பினர்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்க அரசு போர்க் குற்றம் இழைத்துள்ளது, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இழைத்துள்ளது என்று டப்ளினில் விசாரணை நடத்திய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent Peoples Tribunal) கூறியுள்ளதையும், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தத் தவறிய சிறிலங்க அரசின் நடவடிக்கையைக் கண்டிக்கும் விதமாக அந்நாட்டுப் பொருட்களுக்கு அளித்துவந்த வரிச் சலுகையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையையும் சுட்டிக்காட்டிய தமிழர் அமைப்பு பிரதிநிதிகள், இதையெல்லாம் பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் அங்கு சென்று வணிகம் செய்வதிலும் இலாபம் ஈட்டுவதிலும் மட்டுமே குறியாகவுள்ள வர்த்தக நிறுவனங்களின் செயல்பாடு கண்டனதிற்குரியது என்று இக்கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

எனவே, இன்று கொழும்புவில் ஃபிக்கி ஏற்பாடு செய்துள்ள உலக வர்த்தக மாநாடு திட்டமிட்டபடி நடைபெற்றால், ஃபிக்கியின் பல்வேறு அமைப்புகளில் பொறுப்பு வகிக்கும் நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிப்பு செய்யுமாறு போராட்ட அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பொருளாதார புறக்கணிப்பு போராட்டத்தை அடுத்த வாரம் சென்னையில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் வெளியிடுவார்கள் என்றும், குறிப்பாக ஃபிக்கி அமைப்பின் தலைவராக உள்ளவர் ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக உள்ளதால், அந்த நிறுவனத்தின் செல்பேசி சேவையைப் புறக்கணிக்குமாறு அறிவிக்கப்படும் என்றும் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவை நம்பினால் நம்மை யாரும் காப்பாற்றமாட்டார்கள் - இளந்தமிழர் இயக்கம்

Thursday, May 20, 2010


“இந்தியாவை நம்பினால் நம்மை யாரும் காப்பாற்றமாட்டார்கள்” என இளந்தமிழர் இயக்கம் சார்பில், இணையதளத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்துரைத்த அவ்வியக்கத்தின் செயற்குழு உறுப்பினர் ம.செந்தமிழன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலிருந்து வெளியாகும் குமுதம் இதழின் இணையதளத் தொலைக்காட்சியாக, குமுதம்.காம் இதழில், “முள்ளிவாய்க்கால் முடிவல்ல... இனி என்ன செய்வோம்” என்ற நிகழ்ச்சியில், மாணவர்கள் விவாத மேடை நிகழ்வு ஒன்றில், இளந்தமிழர் இயக்கம் சார்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போது அதனை அவர் தெரிவித்தார்.


ஈழப்போராட்டத்தின் எதிர்காலம் குறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது, அவர் பேசியதாவது:

தமிழீழ விடுதலையாக இருந்தாலும் சரி, தமிழ்த் தேசிய தமிழ்நாட்டு விடுதலையாக இருந்தாலும் சரி அதை இந்தியா என்ற ஒரு கட்டமைப்புக்கு வெளியே அல்லது இந்தியாவிற்கு எதிரானதாக இருக்க வேண்டும். ஏனென்றால் அதன் இயல்பே அது தான்.

தமிழீழ பிரச்சினையாகட்டும், தமிழ்நாட்டு தமிழர்களுக்குரிய உரிமைப் பிரச்சினைகளாகட்டும், அவை அனைத்துமே இந்தியாவுக்கு எதிரானவையாகவே இயல்பாக இருக்கின்றன. நாம் விரும்பலாம் அல்லது விரும்பாமல் போகலாம். எனவே, இந்திய எதிர்ப்பு என்பது முதன்மையான தேவை. ஏனென்றால், 1987இல் தொடங்கி 2009 வரை ஈழத்தமிழர்களை கொன்று குவித்ததில் இந்திய இராணுவத்திற்கு பங்கு இருப்பதை இந்தியாவே மறுக்கவில்லை. இதற்குப் பிறகும் நாம் இந்தியா தான் காப்பாற்றும் என்று பேசிக் கொண்டிருந்தால், நம்மை யாருமே காப்பாற்ற மாட்டார்கள்.

எனவே, புலம் பெயர்ந்த தமிழர்களாகட்டும் அல்லது தமிழ்நாட்டுத் தமிழர்களாகட்டும் தமிழ்த் தேசிய அரசியலில், தமிழீழ விடுதலையை முன்னெடுக்க வேண்டுமென்றால் முதலில் அவர்களுக்கு இந்தியாவைப் பற்றியத் தெளிவு வேண்டும். அதில் குழப்பம் கூடாது. யார் எதிரி யார் நண்பர் என்று தெரிய வேண்டும். இதுவே முதல் நிபந்தனையாக நாம் கருதுகிறோம்.

இரண்டாவது, தேர்தல் என்பது இன்றைக்கு ஒரு தொழில். அதில் ஒளிவு மறைவு தேவையில்லை. இதனை கிண்டலாகப் பேசவில்லை. அதனை ஒரு விளக்கமாகவே சொல்கிறேன். தேர்தலில் கட்சிகள் அனைத்தும் கம்பெனிகள் தான். அதில், தி.மு.க. அ.தி.மு.க. அனைத்துமே கம்பெனிகள் தான்.

என்று அவர் பேசினார்.


இவ்விவாதத்தில், சேவ் தமிழ் இயக்கத்தின் அமைப்பாளர் அருண் ஷோரி, சட்டக் கல்லூரி மாணவர்கள் சார்பாக தமிழ்க்குமரன், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சார்பாக வினோத் ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

(விரிவான பேட்டிக்கு காண்க: www.kumudam.com)

முத்துக்குமார் சிலை திறக்க தடை: உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் கண்டனம்!

Tuesday, May 18, 2010



மாவீரன் முத்துக்குமார் சிலை திறக்க தமிழகக் காவல்துறை தடை விதித்ததற்கு உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் கடுமையான கண்டனங்களை எழுப்பியுள்ளனர்.

சிங்கள - இந்திய இனவெறி அரசுகளின் தமிழின அழிப்புப் போரின் இறுதிக்கட்டத்தின் போது, 30,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் பகுதியில் கொன்று குவித்ததை நினைவுகூறும் வகையில், இளந்தமிழர் இயக்கமும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் இணைந்து மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்பு நிகழ்வையும், முள்ளிவாய்க்கால் வீரவணக்கக் கூட்டத்தையும் 16.05.2010 அன்று நடத்தத் திட்டமிட்டன.

அதன்படி, 16.05.2010 அன்று நிகழ்வுகள் நடக்க அனைத்து வித ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்த நிலையில், பல்வேறு காரணங்களைக் காட்டி மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்புக்கும், மாணவர்கள் - இளைஞர்கள் சுடரேந்தி வரும் நிகழ்வுக்கும் காவல்துறையினர் தடை விதித்தனர்.

இதற்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தமிழ்நெட் இணையதளம் இது குறித்த செய்தியை தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.



இது தொடர்பாக, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்:

ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்துத் தன்னையே தீயில் எரித்துக்கொண்டு உன்னதமான உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமாரின் சிலையைத் திறப்பதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தஞ்சைக்கு அருகில் உள்ள செங்கிப்பட்டியில் தனியார் ஒருவர் அளித்த நிலத்தில் முத்துக்குமார் சிலையைத் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி செய்து அதற்காகக் காவல்துறையின் அனுமதியையும் பெற்றிருந்தது. ஆனால் விழா அன்று அற்பக் காரணங்களைக் கூறி சிலையைத் திறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் போன்ற பலவற்றில் தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. தனியாருக்குச் சொந்தமான இடத்தில் சிலைவைப்பதற்கு அரசின் அனுமதி தேவையில்லை. ஆனால் வேண்டுமென்றேத் திட்டமிட்டு முத்துக்குமார் போன்ற தியாக சீலர்களுக்கு சிலை நிறுவுவதைத் தடுக்க தமிழக அரசு முயற்சி செய்வது முத்துக்குமாரின் தியாகத்தை அவமதிப்பதாகும்.

தமிழருக்காகத் தன்னையே அர்ப்பணித்த முத்துக்குமாரின் சிலையை நிறுவுவதற்குரிய தடையை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, நேற்று நடந்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் பேசும் போது, முத்துக்குமாரின் சிலையை தடுத்த முதலமைச்சர் கருணாநிதி ராஜபக்சேவைவிட கொடியவர் என கண்டனம் தெரிவித்தார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளிவந்த செய்தி:


தஞ்சையில் முத்துக்குமார் சிலை நிறுவ தமிழகக் காவல்துறை திடீர் தடை!

Monday, May 17, 2010



ஈழத்தமிழர்களுக்காக தன் இன்னுயிரைத் தீக்கிரையாக்கிய ஈகி முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில் சிலை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

கடந்த ஆண்டு மே மாதம் சிங்கள இந்திய அரசுகள் தமிழீழ மக்கள் மீது தாக்குதல் தொடுத்த, பல்லாயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் பகுதியில் கொன்றொழித்ததை நினைவு கூறும் விதமாக, முள்ளிவாய்க்கால் வீரவணக்கப் பொதுக் கூட்டம் ஒன்றை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்வின் போதே, சிலை திறப்பு நிகழ்வையும் இணைந்து மே 16 அன்று நடத்த ஏற்பாடானது. இதற்காக காவல்துறையினரிடம் முறையான அனுமதியும் பெறப்பட்டிருந்தது.
உலகெங்கும் உள்ள தமிழ் உணர்வாளர்களிடம் முத்துக்குமாருக்கு முதல் சிலை நிறுவும் நிகழ்வுக்கு ஆதரவு குவிந்தது. பல்வேறு இடங்களிலும் இந்நிகழ்வுக்கான அறிவிப்புகள் சிறப்புற செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் நிகழ்ச்சி நடக்கவிருக்கும் முன்தினம்(15.05.2010) அன்று சிலை திறப்புக்கு காவல்துறையினர் திடீர் தடை விதித்தனர். அதன் பின், மாணவர்கள் இளைஞர்கள் சுடரேந்தி வரும் சுடரோட்டம் நிகழ்வுக்கு, நிகழ்ச்சி நடக்கவிருந்த 16.5.2010 அன்று காலை அனுமதி மறுக்கப்பட்டது. கூட்டத்திற்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது. மேடையில் முத்துக்குமார் சிலையை வைப்பதற்கும் காவல்துறை தடை விதித்தது.

நிகழ்வை ஒருங்கிணைத்த தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் குழ.பால்ராசு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் ஆகியோர் இடையறாத பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்பும் கூட காவல்துறை தனது நிலையை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டது.

வீரவணக்கப் பொதுக் கூட்டம்

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தஞ்சை வந்திருந்த உணர்வாளர்கள் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட, முள்ளிவாய்க்கால் வீரவணக்கப் பொதுக் கூட்டம் மட்டும் எழுச்சியுடள் நடத்தப்பட்டது. இளந்தமிழர் இயக்கத்தினர் உணர்வாளர்களை வரவேற்று ஆங்காங்கு தண்ணீர் பந்தல்கள் அமைத்திருந்தனர்.

எழுச்சித் தமிழிசை
புதுவைச் சித்தன் செயமூர்த்தி குழுவினரின் எழுச்சித் தமிழிசையுடன் தொடங்கிய வீரவணக்கப் பொதுக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் குழ.பால்ராசு தலைமை தாங்கினார். அவர் பேசும் போது, காவல்துறையினரின் அடாவடிப் போக்கைக் கடுமையாகச் சாடினார். முத்துக்குமார் சிலையை நிறுவ சட்ட முயற்சிகளை மேற்கொள்வோம் என்றும் அறிவித்தார்.

புலவர் கலியபெருமாள் சிலை திறப்பு
தமிழ்நாட்டு விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்த புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, கரூர் ஓவியர் பரணர் தீட்டிய புலவரின் முழு உருவ ஓவியப் படத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மேற்கு மண்டலச் செயலாளர் கோ.மாரிமுத்து திறந்து வைத்துப் பேசினார்.

வீட்டுக்கு வீடு முத்துக்குமார் சிலை
அதன் பின் மேடை ஏறிய, இளந்தமிழர் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் ம.செந்தமிழன், “முத்துக்குமாருக்கு ஒரு சிலை அல்ல, ஓராயிரம் சிலைகளை நாங்கள் நிறுவுவோம். கையடக்கமுள்ள முத்துக்குமார் சிலைகளை இளந்தமிழர் இயக்கம் தானே தயாரித்து, உணர்வாளர்களிடம் பரப்பும். வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி, தம் சொந்த இடத்தில் இச்சிலை நிறுவப்படும். இதனை யார் தடுக்க முடியும்?” என்று பேசினார்.


(உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் பேசுகிறார்...)

(தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் பேசுகிறார்...)

(புலவர் புலமைப்பித்தன் பேசுகிறார்...)

(இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் பேசுகிறார்...)


(இயக்குநர் ராம் பேசுகிறார்...)


(கூட்டத்திற்கு வருகை தந்த மக்கள் திரள்...)

(முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடரை திரு. பெ.மணியரசன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் ஏற்றி வைக்கின்றனர்...)

(மகளிர் ஆயத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா பேசுகிறார்...)

(இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி பேசுகிறார்...)


(இளந்தமிழர் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் ம.செந்தமிழன் பேசுகிறார்...)





ஈகி முத்துக்குமாரின் தந்தை திரு குமரேசன் வருகை தந்து சிறப்புரையாற்றினார். அதன் பின், மகளிர் ஆயத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, முன்னாள் சட்ட மேலவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இயக்குநர் ராம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் நிறைவுரையாற்றினார்.


முள்ளிவாய்க்கால் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நேரலை

Sunday, May 16, 2010

meenakam on livestream.com. Broadcast Live Free


நன்றி: மீனகம்.காம்.

முத்துக்குமார் சிலை வைக்க அனுமதி மறுப்பு! வீரவணக்கக் கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும்!

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூறும் விதமாக, மாவீரன் முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சிலை திறக்க முடிவெடுத்தது அனைவரும் அறிந்ததே.
இன்று(16.05.2010) அன்று சிலை திறப்புக்கு நாள் குறித்து, அதற்கான விரிவான பரப்புரைகளை இளந்தமிழர் இயக்கமும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினரும் முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில், மாவீரன் முத்துக்குமாரின் சிலையை நிறுவ காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மாணவர்கள் இளைஞர்கள் சுடரேந்தி வரும் ஊர்வேலத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகமெங்குமிருந்து தஞ்சை வந்து கொண்டிருக்கும் உணர்வாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தவும், சிலையை நிறுவுவதை தடுப்பதிலும் காவல் துறையினர் ”மிகுந்த” அக்கறைகாட்டி வருகின்றனர்.
எனினும், திட்டமிட்டபடி முள்ளிவாய்க்கால் வீரவணக்கப் பொதுக் கூட்டம் நடைபெறும் என்றும், அதில் தலைவர்கள் கலந்து கொண்டு பேசுவர் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழர் இயக்கம்

மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்புக்கு நோர்வே ஈழத்தமிழா அவை வாழ்த்து!

Monday, May 10, 2010

மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்புக்கு
நோர்வே ஈழத்தமிழா அவை வாழ்த்து!

ஈழத்தமிழர்களுக்காக தன் இன்னுயிரைத் தீக்கிரையாக்கிய மாவீரன் முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சிலை எழுப்புவதற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பில், நோர்வே ஈழத்தமிழர் அவை இளந்தமிழர் இயக்கத்திற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.

நோர்வே ஈழத்தமிழர் அவையின் தலைவர் வைத்திய கலாநிதி பஞ்சகுலசிங்கம் கந்தையா அவர்கள் எழுதியுள்ள அக்கடிதத்தை மகிழ்வுடன் யாம் வெளியிடுகின்றோம்.

இளந்தமிழர் இயக்க பணி சிறக்க வாழ்த்துகள்!





வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் ஏற்றி வைத்த தீயினில் உருவாகி, எம் இன விடுதலைக்கு அயராது பாடுபடும் இளந்தமிழர் இயக்கத்திற்கு நோர்வே ஈழத் தமிழர் அவையின் வணக்கம்.

வரலாற்றின் ஆதி காலம் முதல் இன்று வரை மொழி, இன, பண்பாட்டால் தமிழகமும் தமிழீழமும் ஒன்றென வாழ்ந்து வந்தாலும், முத்துகுமாரின் உயிர் தியாகம் நம் உறவின் மேன்மைக்கு புதியதோர் அத்தியாத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது. அவ்வீர இளைஞனுக்கு இளந்தமிழர் இயக்கம் நினைவு சின்னம் எழுப்புவதை முன்னிட்டு, நோர்வே ஈழத் தமிழர் அவை பெரு மகிழ்ச்சி அடைவதுடன், தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. வன்னிப் போரின் பொழுதும் இன்றும் இளந்தமிழர் இயக்கத்தின் சீர்மிகு வரலாற்றுக் கடமையினை நோர்வே ஈழத் தமிழர் அவை அறிந்தே வைத்துள்ளது.

எம் மாவீரர்களின் தியாகத்தால் தணல் விட்டு எரியும் விடுதலை தாகம், தமிழக மக்களின் உறுதுணையுடன் தான் விடை காணும் என்பதில் எமக்கு எள்ளளவும் ஐயம் இல்லை. எம் இலட்சிய தீயை அணையாமல் எடுத்து சென்றிட யாம் புதிதாக அரசியல் வழிப் போராட்டத்தை முன்னெடுத்து உலகின் மனசாட்சியை உலுக்கத் தொடங்கியுள்ளோம். எம் வரலாற்றில் முதல் முறையாக புலம் பெயர்ந்த தேசத்தில் வாழும் மக்களின் ஆணையை வாக்கெடுப்பின் மூலம் பெற்று பலம் மிக்க அமைப்பாக நோர்வே ஈழத் தமிழர் அவை செயல்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க செயலாக்கத்தைப் பற்றி எம் தமிழக உறவுகளிடையே எடுத்தியம்பி எம் விடுதலைக்கு வலு சேர்க்க இவ்வேளையில் வேண்டிநிற்கிறோம்.

மேலும், எம் அடுத்த தலைமுறையினருக்கு தமிழ்த் தேசிய சிந்தனையின் விதியினை விதைப்பது நம் போன்றோரின் கடமை என்பதனையும், கடல் கடந்து வாழ்ந்தாலும் எம் கைகள் ஒன்று சேர்ந்தால் பல பணிகளை நாம் செய்யலாம் என்பதனையும் இங்கு நினைவு படுத்துகிறோம்.
இவ்வாறு தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளந்தமிழர் இயக்கம் நன்றி

நோர்வே ஈழத்தமிழர் அவையின் வாழ்த்துக் கடிதத்திற்கு நன்றி தெரிவிப்பதோடு, தமது கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதைப் போன்று தொடர்ந்து இன விடுதலைக்காக இணைந்து செயல்படுவோம் என்றும் நாம் உறுதியளிக்கிறோம்.

குமுதம் ரிப்போhட்டரில் சிலை திறப்பு நிகழ்வு குறித்த செய்தி

தமிழகத்திலிருந்து வெளியாகும் பிரபல செய்தி வார இதழான 'குமுதம் ரிப்போர்ட்டர்” ஏடு, முத்துக்குமார் சிலை தொடர்பாக இவ்வாரம் செய்தி வெளியிட்டுள்ளது.


சிலை திறப்பு நிகழ்வு இணையத்தில் நேரடி ஒளிபரப்பு

மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்பு நிகழ்வையும், முள்ளிவாய்க்கால் வீரவணக்கப் பொதுக் கூட்ட நிகழ்வையும் இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்திட, மீனகம்.காம் இணையதளத்தினர் முன் வந்துள்ளனர். அவர்களுக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பங்களிப்பு செய்ய விரும்புவோர்க்கு...

மாவீரன் முத்துக்குமார் சிலையில் தங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் இன உணர்வாளர்கள் தமது பங்களிப்புகளை 14.05.2010 மாலைக்குள் அனுப்பி வைக்கமாறு அன்புடன் வேண்டுக் கேட்டுக் கொள்கிறோம். இதற்குரிய வங்கிக் கணக்கு எண் விபரத்தையும் யாம் இங்கு வெளியிடுகின்றோம்.

வங்கிக் கணக்கு விவரங்கள்: 

தோழமையுடன்,
க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர் இளந்தமிழர் இயக்கம்
Cell : +91 9841949462

மாண்புமிகு தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு அவசர வேண்டுகோள்!

Wednesday, May 5, 2010


மாண்புமிகு தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு
மலேசிய தடுப்புக் காவலில் தவிக்கும் 75 ஈழஅகதிகளின்
ஒலிவடிவ கோரிக்கை
இளந்தமிழர் இயக்கத்தின் அவசர வேண்டுகோள்!

இலங்கைத் தீவில் வாழ வழியின்றி, அத்தீவைவிட்டு வெளியேறி மலேசியாவிற்கு, அகதிகளாகச் சென்ற பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 75 ஈழத்தமிழர்கள், மலேசிய அரசால் சிறைபிடிக்கப்பட்டு கோலாலம்பு+ர் விமான நிலையத்தின், குடியேற்றத் துறையினருக்குச் சொந்தமான இடத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே கடந்த 25.04.2010 அன்று, இளந்தமிழர் இயக்கத்தின் முன்முயற்சியால், சென்னையில் உள்ள மலேசியத் துணைத் தூதருக்கு, பல்வேறு தமிழ் உணர்வாளர் அமைப்புகளை ஒருங்கிணைத்து கோரிக்கை மனு ஒன்றும் அளிக்கப்பட்டிருந்தது. அம்மனுவில், தஞ்சமடைந்த அகதிகளை மலேசிய நாட்டிலேயே ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய விதிகளின்படி அகதிகளாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் அவர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தோம். இதே நோக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளும் மலேசியத் துணைத் தூதரிடம் மனு அளித்துள்ளன.

இந்நிலையில், மலேசிய அரசு தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களை அகதிகளாகப் பதிவு செய்து கொள்ள மறுத்துள்ளதுடன், அவர்களை கோலாலம்பு+ர் விமான நிலையத்தில் தடுப்புக் காவலில் வைத்துள்ளது. தடுப்புக் காவலில் உள்ள பெண்களும் குழந்தைகளும் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனிடையே, மலேசியாவில் சிக்கித் தவிக்கும் 75 ஈழத்தமிழர்கள் சார்பில், அகதிகளாக தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் கோரிக்கை மனு ஒன்றை எழுத்து வடிவில் பெறும் நோக்கில் பல்வேறு கட்ட முயற்சிகளை இளந்தமிழர் இயக்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், அவசரச் சூழலைக் கருதி அம்மக்களின் ஒலி வடிவ கோரிக்கையை இளந்தமிழர் இயக்கம் பெற்றுள்ளது. அதனை இவ்வறிக்கையுடன் யாம் வெளியிடுகின்றோம்.



மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி அவர்களுக்கு மலேசியாவில் சிக்கித் தவிக்கும் 75 ஈழத்தமிழ் அகதிகள் சார்பில் விடுக்கப்படும், இந்த அவசர ஒலி வடிவக் கோரிக்கையை, உணர்வாளர்களும், பல்வேறு அமைப்புகளும் தங்களால் இயன்ற அளவில் முயன்று தமிழக அரசிடம் கொண்டு சேர்த்து, ஈழஅகதிகளின் கோரிக்கையை உலகறியச் செய்திட முன்வருமாறும் இளந்தமிழர் இயக்கம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.

இந்த ஒலி வடிவக் கோரிக்கையை தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள தனிப்பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கும் இளந்தமிழர் இயக்கம் அனுப்பி வைக்கிறது. இந்த ஒலி வடிவ வேண்டுகோளை ஏற்று, மலேசியாவில் சிக்கித் தவிக்கும் ஈழத்தமிழர்கள் 75 பேரையும் தமிழகத்தில் அகதிகளாகப் பதிவு செய்து கொள்ளும் நோக்கிலான முயற்சியை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.

நன்றி!

தோழமையுடன்,
க.அருணபாரதி

| ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழர் இயக்கம் |

இடம் : சென்னை-17.
நாள் : 05.05.2010

மாவீரன் முத்துக்குமாருக்கு தஞ்சையில் சிலை திறப்பு : இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு

Wednesday, April 28, 2010

முள்ளிவாய்க்கால் வீரவணக்கம்
மாவீரன் முத்துக்குமாருக்கு தஞ்சையில் சிலை திறப்பு
இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு
சென்னை, 17. 29.04.2010.

தமிழீழ மக்கள் மீது, சிங்கள - இந்தியக் கூட்டுப் படைகள் நடத்திய தமிழின அழிப்புப் போர் முடிவுற்று ஓராண்டாகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என தமிழர்கள் கூட்டம் கூட்டமாக இரக்கமின்றி குண்டுகள் வீசப்பட்டுக் கொன்றொழிக்கப்பட்ட அந்த இறுதி நாட்களைப் போல் கொடூரமான நாட்களை, உலகில் எந்தவொரு இனமும், எந்தவொரு விடுதலைப் போராட்டமும் சந்தித்ததில்லை.

இனவெறியின் கோரப் பசிக்கு பலியான எம் தமிழ் உறவுகளுக்கும், தமிழீழத் தாயக விடுதலைக்காக போர்க்களத்தில் நின்றுப் போராடி உயிர் ஈகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளுக்கும் இளந்தமிழர் இயக்கம் தனது வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவை துக்க தினமாக நினைவு கூர்வதுடன், அந்நாளை இன விடுதலைப் போராட்டத்திற்கு சூளுரை மேற்கொள்ளும் நாளாக கடைபிடிக்குமாறு இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவை நினைவுகூறும் விதமாகவும், தேர்தல் அரசியலை சாராத மாற்று அரசியல் எழுச்சியே தமிழினத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என்று வலியுறுத்தும் வகையிலும், மாற்று அரசியலை முன்னிறுத்தி, தன் இன்னுயிரை தீக்கிரையாக்கிய ஈகி முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில், முதன் முறையாக மார்பளவு சிலை தஞ்சையில் நிறுவப்படவுள்ளது. இச்சிலை தமிழ்நாட்டுத் தமிழர்களின் எழுச்சிக்கு குறியீடாகவும், மாற்று அரசியல் வெளிக்கான தொடக்கப் புள்ளியாகவும் அமையட்டும்.

முள்ளிவாய்க்கால் பேரழிவுப் போர் தொடங்கப்பட்ட நாளான மே 16 (16.05.2010) அன்று மாலை தஞ்சாவு+ர் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, சாணுரப்பட்டி (செங்கப்பட்டி) பகுதியில் அமைந்துள்ள தனியார் இடம் ஒன்றில், இச்சிலை நிறுவப்படுகின்றது.




சிலை திறப்பு நிகழ்வுக்கு மாவீரன் முத்துக்குமாரின் தந்தையார் திரு. ச.குமரேசன் கலந்து கொள்ள இசைவு தந்துள்ளார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. பெ.மணியரசன் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார். இளந்தமிழர் இயக்கத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட முத்துக்குமார் சிலையை அன்பளிப்பாக வழங்கி, இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு. ம.செந்தமிழன், சிறப்புரையாற்றுகிறார்.

சிலை திறப்பு நிகழ்வை முன்னிட்டு, பிற்பகல் 2 மணிளவில் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து மாணவர்கள் - இளைஞர்கள் சுடரேந்தி வரும் வகையில், சுடரோட்டம நிகழ்வு நடைபெறுகின்றது. பு+தலூர், ஆவாராம்பட்டி, நந்தவனப்பட்டி வழியாக சாணுரப்பட்டிக்கு இச்சுடரோட்டம் வந்தடைகிறது.

மாலையில், ‘முள்ளிவாய்க்கால் வீரவணக்கம்’ என்ற தலைப்பில் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், மேனாள் சட்ட மேலவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு கி.வெங்கட்ராமன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இயக்குநா; ராம், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் நா.வைகறை, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல, புதியதொரு தொடக்கம் என்பதை இவ்வுலகிற்கு நாம் அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை தமிழகத் தமிழர்கள் மறந்து விடக்கூடாது. தாய்த் தமிழகத்தில் எழுகின்ற எழுச்சியே தமிழீழ மக்களின் நலன் காக்கும் என்பதை உறுதியாக நம்பிக் களம் இறங்க வேண்டிய சூழல் இது என்பதை முன்வைத்தும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தமிழகமெங்கும் உள்ள இன உணர்வாளர்கள், கட்சி வேலிகளைக் கடந்து ஒன்று கூட வேண்டும் எனவும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன விடுதலைக்கான சூளுரை தினமாக நெஞ்சிலேந்தி, விடுதலைப் பாதையில் அணிதிரள வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறது. தமிழ் உணர்வாளர்கள் இந்நிகழ்வில் பெருந்திரளாக பங்கெடுக்க வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

சிலை திறப்பு மற்றும் வீரவணக்கப் பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், இளந்தமிழர் இயக்கமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. சிலை திறப்பு நிகழ்வில், பங்களிப்பு செலுத்த விரும்பும் உணர்வாளர்கள், elanthamizhar@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரி அல்லது +91-9841949462 என்ற கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு உதவலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி!

தோழமையுடன்,
க.அருணபாரதி

| ஒருங்கிணைப்பாளர் | இளந்தமிழர் இயக்கம் |

மலேசியா அரசு ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்பக் கூடாது – சென்னை மலேசியத் தூதரகத்தில் மனு

Sunday, April 25, 2010

மலேசியா அரசு ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்பக் கூடாது
சென்னை மலேசியத் தூதரகத்தில் மனு
சென்னை, 25.04.2010.


சிங்கள இனவெறி அரசு நடத்தியப் போரில் பாதிப்புற்று, வன்னி வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு பின் விடுதலையான ஈழத்தமிழர்கள் 75 பேர், வாழ வழியின்றி மலேசியாவிற்கு அகதிகளாக சென்றனர். அவர்களை மலேசிய அரசு கைது செய்து இலங்கைக்கு திரும்ப அனுப்பப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தஞ்சம் கோரி வந்த தமிழர்களை திரும்ப இலங்கைக்கு அனுப்பக் கூடாது என்று வலியுறுத்தி, தமிழகத் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள மலேசியத் தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இன்று(25.04.2010) காலை சென்னை நுங்கம்பாக்கம் மலேசியத் தூதரகத்திற்குச் சென்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் இம்மனுவை மலேசியத் துணைத் தூதர் அன்வர் கஸ்மான் அவர்களிடம் நேரில் வழங்கினார். பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் குமரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் அமைப்புக்குழு உறுப்பினர் சிவகாளிதாசன், இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.




மனுவைப் பெற்ற மலேசியத் துணைத் தூதர், இம்மனுவின் விபரங்களை தில்லியில் உள்ள மலேசியத் தூதரிடம் கூறுவதாகவும், தங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வதாகவும் கூறினார்.

அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் வன்னி முகாம்களில் வதைபட்டு பின்னர், இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட தமிழர்கள் தங்கள் சொந்த வீடுகளும் கிராமங்களும் தகர்க்கப்பட்டும், சிங்களர்களால் ஆக்கிரமிக்கப்பட்டும் இருப்பதால் வாழ வழியின்றி மலேசியாவுக்கு அடைக்கலம் தேடி வந்துள்ளார்கள். அவ்வாறு படகில் வந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 75 பேரை மலேசிய அரசின் கப்பல் படை, தடுத்து பினாங்குத் துறைமுகம் அருகில் நிறுத்தியுள்ளது.

அவர்களுக்கு அடைக்கலம் தரமறுப்பதுடன் இலங்கைக்கு திருப்பி அனுப்பப் போவதாக மலேசிய அரசு கூறுகிறது. “திருப்பி அனுப்பினால் இலங்கை அரசு எங்களைக் கொன்று விடும். அடைக்கலம் கொடுங்கள்; திருப்பி அனுப்பினால் குழந்தைகளுடன் நாங்கள் அனைவரும் கடலில் குதித்து இங்கேயே செத்துப்போவோம்” என்று தமிழ் மக்கள் கூறுகிறார்கள்.

மலேசிய அரசு, மனித நேய அடிப்படையிலும், ஐ.நா. மனித உரிமை அட்டவணைப்படியும் போரினால் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடி வந்துள்ள ஈழத்தமிழர்கள் மலேசியாவில் தங்க அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். எக்காரணம் கொண்டும் அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும் அவ்வாறு திருப்பி அனுப்பினால் 75 உயிர்களை மலேசிய அரசு ஒரு கொலைக்களத்திற்கு அனுப்பி வைத்ததாகும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னையில் உள்ள உணர்வாளர்களுக்கு அவசர வேண்டுகோள்!

Saturday, April 24, 2010


மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 75 ஈழத்தமிழர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்ப அவ்வரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. ஈழத்தமிழர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்ப வேண்டாம் என்பதை வலியுறுத்தி, சென்னையில் உள்ள மலேசியத் தூதரகத்திடம் மனு கொடுக்க, இன்று காலை 11.30 மணியளவில் செல்லவுள்ளோம்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், உள்ளிட்ட தமிழ் அமைப்புத் தலைவர்கள் இதில் கலந்து கொள்ள முன் வந்துள்ளனர்.

சென்னையில் உள்ள உணர்வாளர்கள் லயோலா கல்லூரிக்கு எதிரில் அமைந்துள்ள மலேசியத் தூதரகம் முன்பு, முன்கூட்டியே வந்திருந்து அம்மனுவில் கையெழுத்திட்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
க.அருணபாரதி,

ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்

பேச: 9841949462

திருமதி பார்வதியம்மாள் திருப்ப அனுப்பபட்டமையும் சில கசப்பான உண்மைகளும்

Saturday, April 17, 2010

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தாயார் திருமதி பார்வதியம்மாள் அவர்கள் மலேசியாவிற்கு திரும்ப அனுப்பப் பட்டது தொடர்பாக, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி இன்று (17.04.2010) வெளியிட்டுள்ள அறிக்கை:



தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தாயார் திருமதி பார்வதியம்மாள் வேலுப்பிள்ளை அவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வானூர்தி மூலம், நேற்று(16.04.2010) இரவு மலேசியாவிலிருந்து, தமிழகம் வந்திருந்தார். அவரை தரையிறங்க விடாமல், அதே விமானத்தில் இந்திய அரசு திருப்பி அனுப்பியமை மிகவும் கண்டனத்திற்குரிய மனிதத் தன்மையற்ற செயலாகும்.

திருமதி பார்வதியம்மாள் அவர்களை திருப்பி அனுப்பும் முடிவு இந்திய அரசு எடுத்திருந்த முடிவு என்றாலும், அதில் தமிழக அரசிற்கு பங்கிருப்பதை தட்டிக் கழிக்க முடியவில்லை. இவ்வாறு, தொடர்ந்து தமிழினத்திற்கு எதிராக மனித நேயமற்ற செயல்களை இந்திய அரசு செய்து வருவதை உலகத் தமிழர்கள் ஒன்றுபட்டு கண்டிக்க வேண்டும்.

இந்திய, தமிழக அரசுகளை கண்டிப்பதோடு நின்று விடாமல், இந்த சம்பவத்திற்கான முழுக் காரணிகளையும் நாம் ஆய்வுக்கு உட்படுத்தியாக வேண்டும். இந்த ஆய்வின் முடிவுகள், உணர்வாளர்கள் தம்மை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதோடு அல்லாமல் சமரசவாதத்தையும் சுட்டிக் காட்டுகின்றது.

முறைப்படி இந்திய அரசுக்கு விண்ணப்பித்து, விசா பெற்று தமிழகம் வந்திருந்த அவரை, வந்த விமானத்திலிருந்து கூட கீழே இறங்க விடாமல் செய்த செயல் மனித நேயமற்றதாகும். ஏற்கெனவே பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் தொடர்ந்து விமானப் பயணத்தை மேற்கொள்ளவதில் உள்ள சிரமங்களைக் கணக்கில் கொள்ளாமல், அதே விமானத்தில் அவரை வைத்திருந்துள்ளனர், இந்திய அரசின் குடியுறவுத் துறை அதிகாரிகள்.

சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்று இப்போது கூச்சலிடுகின்ற அரசு, அவரது விண்ணப்ப விசாவை தொடக்க நிலையிலேயே மறுத்திருந்தால், நோயுற்ற வயதான அப்பெண்மணி நெடுந் தொலைவிலிருந்து இங்கு வந்திருக்க வேண்டிய தேவை எழுந்திருக்காது. ஆனால், அவரை அங்கிருந்து வரவழைத்து ‘அனுமதியில்லை’ என்று திருப்பி அனுப்பி, ஏற்கெனவே நோயுற்ற அவருக்கு மன உளைச்சலையும், தேவையற்ற உடற்ச்சோர்வையும் ஏற்படுத்தும் வகையில் இந்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டுள்ளது. இதே போல், சென்னையில் தங்கி சிகிச்சை பெறுவதற்காக வந்த இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவாஜிலிங்கம் அவர்களையும், சில தினங்களுக்கு முன்பு இந்திய அரசு திருப்பி அனுப்பியதையும் நாம் அறிவோம்.

திருமதி. பார்வதியம்மாள் சிகிச்சைக்காக தமிழகம் வரும் செய்தி, மிகவும் கமுக்கமாக வைக்கப்பட்டிருந்தது தவறு. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு.பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களுக்கும், காவல்துறையினருக்கும் மட்டுமே தெரிந்த இந்த கமுக்கமான தகவல் பரவலாக உணர்வாளர்களுக்குத் தெரிவிக்கப்படாததால், உணர்வாளர்கள் விமான நிலையத்தில் உரிய நேரத்தில் கூடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பதே கசப்பான உண்மை. ஓரளவு திரண்ட உணர்வாளர்களை வைத்துக் கொண்டு கூட எவ்வித போராட்டங்களையும் முன்னெடுக்காமல், இத்தலைவர்கள் பேட்டி மட்டும் கொடுத்து விட்டு கலைந்து சென்றதும் வருத்தமளிக்கிறது.

திருமதி பார்வதியம்மாள் தமிழகம் வருவது குறித்து தகவல் தெரிவிக்க முடியாமல் போயிருந்தாலும், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள தகவலாவது உரிய நேரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தால், பெருந்திரளான உணர்வாளர்களைக் கொண்டு விமான நிலையத்திலேயே போராட்டங்களை நடத்தி திருமதி பார்வதியம்மாள் அவர்களுக்கு தரையிறங்க அனுமதியைப் பெற்றுத் தந்திருக்க முடியும். ஆனால், அதற்கான வாய்ப்பு நேற்று தட்டிப்பறிக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை.

சிலர் கருதுவது போல், உணர்வாளர்கள் மிகுதியாக வந்திருந்தால், திருமதி பார்வதியம்மாள் அவர்களுக்கு பாதுகாப்பாகத்தான் இருந்திருக்குமே அன்றி பாதகமாக இருந்திருக்காது என்பதை இத்தலைவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. திருமதி பார்வதியம்மாள் செல்கின்ற வாகனத்தை உணர்வாளர்கள் மறித்திருப்பார்கள் என இத்தலைவர்கள் கருதுகின்றனரா என்பதும் விளங்கவில்லை.

புதிய இயக்கமாக இருந்தாலும், சமரசவாதங்கள் தமிழக அரசியலை எவ்வாறு சீரழித்தன என்பதை இளந்தமிழர் இயக்கம் நன்கு உணர்ந்திருக்கிறது. கமுக்கமாக பேச்சுவார்த்தை நடத்தி காரியம் சாதிக்கும் வழியை, தமிழீழ தேசியத் தலைவரும் மாவீரன் முத்துக்குமாரும் நமக்குக் காட்டவில்லை என்பதையும் நாம் உணர்ந்திருக்கிறோம். போராடி நம் உரிமைகளைப் பெறும் வழியையே நமக்கு அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். நாமும் அவ்வழியில் போராட வேண்டும் என்பதே நமது விருப்பம். நேற்று அவ்வாறு போராடியிருந்தால், நம்மால் நிச்சயம் வென்றிருக்கவும் முடியும்.

இந்தியாவை எதிரியாக வைத்துப் போராடினால் தான் ஈழம் சாத்தியம் - இளந்தமிழர் இயக்கம்

Thursday, March 4, 2010


புலம் பெயர்ந்த தமிழர்களும், தமிழ்நாட்டு மக்களும், தமிழீழ மக்களும் இணைந்து இந்தியாவை எதிரிப் பட்டியலில் வைத்துப் போராடினால் தான் ஈழம் சாத்தியம் என்று இளந்தமிழர் இயக்கம் கூறியுள்ளது.

தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகும், “தமிழன் தொலைக்காட்சி”யில் கடந்த ஞாயிறன்று(29.03.2010) ஒளிபரப்பான பேட்டி ஒன்றில், இளந்தமிழர் இயக்கம் சார்பில் கருத்துரைத்த அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி இதனை தெரிவித்துள்ளார்.

இந்நேர்காணலில் அவர் பேசியதாவது:

கேள்வி: இந்த அழிவுக்குப் பிறகு ஒரு மயான அமைதி. தமிழகத்தில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழுகின்ற இடத்திலெல்லாம் ஒரு அமைதி. இத்தனை ஆண்டுகாலம் முன்னெடுத்துச் சென்றத் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற தெரியாத சூழல். விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி. இதற்குப் பிறகு இந்த இயக்கம் என்னவாகும்? இந்த இயக்கம் இதுவரைக்கும் முன்னெடுத்துச் சென்று தனித்தமிழீழம் என்ற கொள்கை என்னவாகும் என்ற கவலை உலகத் தமிழர்களிடையே இப்போது இருக்கிறது. இவ்வளவு தூரம் வந்த விடுதலைப் போராட்டத்திற்கு எப்பொழுதும் முற்றுப்புள்ளி கிடையாது. எங்கிருந்தாவது ஒரு பொறி கிளம்பும் அது வரலாறு. இம்மாதிரியான மயான அமைதி தெரிகின்ற சூழலில் எங்கிருந்து அந்தத் தீப்பொறி எப்படி, எப்பொழுது கிளம்பும்? ஈழத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

அருணபாரதி: அந்தத் தீப்பொறி கிளம்ப வேண்டிய இடம் தமிழ்நாடு தான். உலகத்தமிழர்களின் தாய்த் தமிழகம் இது. உலகத்தமிழர்கள் எல்லோருக்கும் ஒரு தாய் இது. தாய் தான் கதறி அழ வேண்டும். அங்கு 35,000 மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரு மிகப்பெரும் படுகொலையை, இனப்படுகொலையை இந்த இனம் சந்தித்திருக்கிறது. அதற்கான நீதியை கேட்க வேண்டிய தமிழீழ மக்கள் இப்பொழுது அகதிகளாக அங்கு இருக்கிறார்கள். அவர்கள் கேட்கவில்லை என்றாலும், அதற்கான நீதியை தமிழ்நாட்டுத் தமிழர்கள் அந்த நீதியைக் கேட்டாக வேண்டும்.

இது ஒரு ஆழ்கடல் அமைதி. இது மயான அமைதியல்ல. சுனாமி வருவதற்கு முன்னாலும், அந்தக் கடல் அவ்வளவு அமைதியாக இருக்கும். பின்வாங்கும். அது பின்வாங்கியப் பிறகு தான் ஒரு மிகப்பெரும் சுனாமியாக வந்து ஊரையே அழித்துவிடும். அம்மாதிரியான ஒரு பின்வாங்கல் இது. தற்காலிக பின்னடைவு இது. இதை வைத்து எல்லாம் முடிந்து விட்டது என்று நாம் சொல்ல வேண்டியதில்லை. இதிலிருந்து எல்லாம் ஒரு புதிய திசையில் தொடங்கியுள்ளன என்று நாம் கூறலாம்.

இன்று ஈழம் பற்றிய பேச்சை தமிழர்கள் நாம் மட்டும் பேசவில்லை. உலகம் பேச ஆரம்பித்துள்ளது. உலகத்திலுள்ள பல நாடுகள் பேசியுள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்பு, இலண்டனில் உலகத் தமிழர் பேரவை மாநாடு ஒன்று நடத்தினர். அம்மாநாட்டில் பிரிட்டிஷ் பிரதமர் கலந்து கொண்டிருக்கிறார். இவையெல்லாம் மிகப்பெரும் நடவடிக்கைகள். புலம் பெயர் மக்கள் என்ன செய்கிறார்கள் என்றால், அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு அவர்களுடைய கோரிக்கையை தெளிவாக புரிய வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இம்மாதிரியான நடவடிக்கையை தமிழ்நாட்டிலும் நாங்கள் மேற்கொள்வோம். இலங்கைத் தமிழ் மக்களின் படுகொலையை மக்களிடம் சேர்ப்போம். இப்படி சேர்த்தால் தான் தமிழ்நாட்டிலும் ஒரு எழுச்சி வரும்.

முத்துக்குமார் தொடக்கி வைத்த எழுச்சி, “போரை நிறுத்துங்கள். இந்திய அரசு தான் உங்களுக்கு எதிரி” என்று சொல்லி விட்டது, முத்துக்குமாரின் தியாகம். தமிழ்நாட்டில் புதிதாக நாம் என்ன போராட வேண்டும் என்றால், இந்திய அரசை எதிரியாக வைத்து தமிழீழத்திற்கான நியாயத்தைக் கேட்க வேண்டும். அந்த நியாயத்தைக் கேட்பதற்கான ஒரு போராட்டம், ஒரு கிளர்ச்சி. எதிரிகள் இதற்கு பல பெயர்கள் சூட்டுவார்கள். நாம் நியாயம் கேட்டாலே, அந்தக் கதறலை பார்த்துக் கூட அவர்களுக்கு உதறல் வரும். நாம் நியாயம் கேட்டாலே அவர்கள் பயப்படுவார்கள். அப்படிப்பட்ட ஒரு காலத்தை உருவாக்க வேண்டும்.

இவ்வகையில் தமிழ்நாட்டு மக்களும், புலம்பெயர்ந்த மக்களும், தமிழீழ மக்களும் ஒன்றிணைந்து ஒரு போராட்டத்தின் மூலம் ஈழத்தை நிச்சயமாக அமைக்க முடியும். நம் காலத்திலேயே ஈழத்தை நாம் காண முடியும்.
இவ்வாறு அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.


நேர்காணலை முழுமையாகக் காண இங்கு சொடுக்குங்கள்.



வழக்கறிஞர் பூ.அர. குப்புசாமி மறைவுக்கு இளந்தமிழர் இயக்கத்தின் வீரவணக்கங்கள்!!

Monday, February 15, 2010

'காவிரி மீட்புப் போராளி’
வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி மறைவு
இளந்தமிழர் இயக்கம் வீரவணக்கம்!

காவிரி நீர் உரிமை மீட்புக்காகவும், தமிழின மேம்பாட்டுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த கரூர் வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி அவர்கள் கடந்த ஞாயிறன்று (14.02.2010) இரவு, உடல் நலக்குறைவுக் காரணமாக இயற்கை எய்தினார். அவருக்கு இளந்தமிழர் இயக்கம் தனது வீரவணக்கத்தைச் செலுத்துகின்றது.

தமிழக உழவர்களின் உயிர்ச் சிக்கலான காவிரி நீர் உரிமைக்காக பல்வேறு போராட்டங்களையும், வழக்குகளையும் முன்னின்று நடத்தியவர் திரு. பூ.அர.குப்புசாமி ஆவார். காவிரிக் காப்புக் குழுவிற்கு அவர் தலைவராகவும் பணியாற்றி வந்தார். காவிரி உரிமையை மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருந்தார். தமிழக ஆற்றுநீர் படுகைகளில் நடந்து வந்த மணற் கொள்ளையை முதன் முதலில் அம்பலப்படுத்தியமை திரு. பூ.அர.குப்புசாமி அவர்களின் அஞ்சாமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

1990களில் கர்நாடக மாநிலத்தில், தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டு, அவர்தம் சொத்துக்கள் சூறையாடப்பட்ட போது, அதற்காக இந்திய உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி நட்ட ஈட்டுத் தொகை வாங்கித் தர பெரும் பாடுபட்டவர் திரு. பூ.அர.குப்பசாமி. தந்தைப் பெரியார் வழியில் சாதி மறுப்புக் கொள்கையில் உறுதியுடன் செயல்பட்டு நூற்றுக்கணக்கான சாதி மறுப்புத் திருமணங்களை நடத்திய திரு.குப்புசாமி, தமிழக ஆற்று நீர் உரிமைச் சிக்கல்களுக்காக மட்டுமின்றி தமிழீழ விடுதலைக்காகவும் குரல் கொடுத்துப் போராடியவர் ஆவார். திரு. குப்புசாமி பெரியார், ஜீவா போன்ற வரலாற்று நாயகர்களுடன் நெருங்கிய தொடர்பு பேணியவர்.

கல் குவாரிகளில் இருந்து சித்தன்னவாசல் குகைக் கோயில் சிற்பங்களைப் பாதுகாத்தவர். ஒரத்துப்பாளையம் அணையில் சேர்ந்த திருப்பூர் சாயப் பட்டறைக் கழிவால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு பெற்றுத் தர பாடுபட்டவர்.

திரு.குப்புசாமி காவிரி உரிமை மீட்பில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் செய்து வந்த துரோகங்களை அம்பலப்படுத்தித் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தார். இவரது போர்க்குணத்தை சிறப்பிக்கும் விதமாக, உலகத் தமிழர் பேரமைப்பு, 'தமிழ்த் தேசிய செம்மல் விருது” அளித்து கௌரவித்தது குறிப்பிடத்தக்கது. தம் வீட்டில் பல்வேறு அரிய நூல்களை சேமித்து வைத்து, தனி அருங்காட்சியகத்தையே ஏற்படுத்தியிருந்தார். அவரது மறைவால், தமிழகத்தின் உரிமை மீட்பு வரலாற்றில் ஏற்பட்டுள்ள, வெற்றிடத்தை, அறிவார்ந்த மாணவர்களும் இளைஞர்களும் நிரப்ப வேண்டும்.

காவிரி நீர்ச்சிக்கல் குறித்து இளந்தமிழர் இயக்கத்தின் வெளியீட்டுப் பிரிவு எடுத்து வருகின்ற ஆவணப்படத்தில், திரு. பூ.அர.குப்புசாமி அவர்களது பேட்டியும், அவர் நடத்தியப் போராட்டங்களின் வரலாறும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அன்னாரது நினைவாக, விரைவில் இந்த ஆவணப்படம் வெளியிடப்படும் என்று இளந்தமிழர் இயக்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி உரிமை மீட்புப் போராளி வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி அவர்களுக்கு வீரவணக்கங்கள்!

தோழமையுடன்,
க.அருணபாரதி,
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்

நாள் 16.02.2010
இடம் : சென்னை-17.

நளினி விடுதலையை எதிர்க்கும் காங்கிரசுக்கு ஆதாரங்களுடன் இளந்தமிழர் இயக்கம் கேள்வி

சீக்கியர்களுக்கு ஒரு நீதி! தமிழர்களுக்கு ஒரு நீதியா?
ஆதாரங்களுடன் கேள்வி எழுப்புகிறது இளந்தமிழர் இயக்கம்

இராசீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் கடந்த 19 ஆண்டுகளாக வாடி வரும் நளினியை விடுதலை செய்யக் கூடாது என, கடந்த மக்களவைத் தேர்தலில் நின்று தோற்றுப் போன முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார். அவர் மட்டுமின்றி பல்வேறு காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து இவ்வாறு நளினி விடுதலைக்கு எதிராக பேசி வருகின்றனர்.
நளினியின் விடுதலை அளிக்கக்கூடாது என்று பேச, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஒன்றும் நீதிபதிகள் அல்ல என்பதை இளந்தமிழர் இயக்கம் நினைவு+ட்ட விரும்புகின்றது. இது குறித்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ள நிலையில், நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக பேசி வரும் காங்கிரஸ் கட்சியினரை இளந்தமிழர் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
நளினி விடுதலை குறித்த விவாதம் எழுந்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி படுகொலை குறித்த சில செய்திகளை இளந்தமிழர் இயக்கம் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றது.
இந்தியப் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவருமான இந்திராகாந்தியை, சீக்கியர்களின் புனிதத்தலமான பஞ்சாப் பொற்கோவிலுக்குள் இராணுவ நடவடிக்கை எடுத்ததன் விளைவாக, அவர் பதவியில் இருந்த போதே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டுக்கொன்ற, சீக்கிய இனத்தைச் சேர்ந்த பியாந்த் சிங், சத்வந்த் சிங், கேஹர் சிங் உள்ளிட்டோரை இன்றளவும் சீக்கியா;கள் தியாகிகளாக போற்றி வருகின்றனர். அவர்களது நினைவு நாள் இன்றும் போற்றுதலுக்குரியதாக சீக்கியர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
சீக்கிய இனத்திற்காக தியாகம் செய்தவர்கள்(Martyrs of Sikhism) என சீக்கியர்களின் அதி உயர் பீடமான 'அகால் தக்கட்'(Akal Takhat) அவர்களுக்கு 2008 ஆம் ஆண்டு சனவரி 6 அன்று பட்டம் சூட்டி கௌரவித்தது. பியாந்த் சிங் உள்ளிட்டோரின் நினைவாக, சிரோன்மணி அகாலி தளம் அமைப்பு, அக்டோபர் 31 2008 அன்று 'தியாகிகள் தினம்' கடைபிடித்தது. தற்போது, நியு+சிலாந்தில் அமைந்துள்ள சீக்கிய மதக் கோவில் ஒன்றில், இவர்களுக்கு படம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுவது குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.
இதே போல, இந்திராகாந்தியை சுட்டுக் கொன்ற சீக்கியர்களுக்கு, இன்றளவும் சீக்கியர்களின் புனிதத் தலமான பஞ்சாப் பொற்கோவிலுக்குள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டும் வருகின்றது. இது குறித்த புகைப்பட ஆதாரத்தை இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, கடந்த சனியன்று(13.02.2010) சென்னை தாம்பரத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடத்தப்பட்ட மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில், மக்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் அந்நிகழ்வில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியினரின் பாசிசப் போக்கைக் கண்டித்தனர்.

தமது இனத்தின் மீது தாக்குதல் தொடுத்த பிரதமரை, சுட்டுக் கொன்ற சீக்கியர்களை அவ்வின மக்கள்; இன்றும் போற்றுகிறார்கள் என்பது, அந்த இனத்தின் மீது சீக்கியர்களுக்கு உள்ள பற்றுறுதியை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
தமிழகக் காங்கிரசார் இன்றும் 'அன்னை' என்று போற்றுகின்ற இந்திராகாந்தியை சுட்டுக் கொன்றவர்களை இன்றளவும் சீக்கியர்கள் தியாகிகளாக போற்றுகின்ற நிலையில், அந்த இனத்திற்கே பிரதமர் பதவி கொடுத்தும் அலங்கரித்துப் பார்க்கிறது, காங்கிரஸ் கட்சி. ஆனால், இன்னொருபுறத்தில், இராசீவ் கொலையுடன் தொடர்புடையவர் என்ற ஒரே காரணத்திற்காக நளினியை அவரது குழந்தையின் எதிர்காலம் உள்ளிட்டவற்றை கூட எண்ணாமல், சாகும் வரைத் சிறைவைக்கக் கூறும் காங்கிரசாரின் நிலை, பாரபட்சமானது.
தமிழீழத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்தும், தமிழ் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தும் இந்திய அமைதிப்படை நடத்திய அட்டூழியங்களுக்கு எதிர்வினையாகவே இராசீவ் காந்தி கொலை நிகழ்த்தப்பட்டது என இந்திய உச்சநீதிமன்றமே தமது தீர்ப்பில் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த நிலையிலும் கூட, இன உணர்வுடன் சீக்கியர்கள் ஏற்றுக் கொண்டதைப் போல, தமிழக மக்கள் இராசீவ்காந்தி கொலையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனை துன்பியல் நிகழ்வாகவே கருதுகின்றனர். இருந்தபோதும், தமிழகக் காங்கிரஸ் கட்சியினர், சீக்கியர்களுக்கு எதிராக சீறாமல், தமிழர்களுக்கு எதிராக மட்டும் தொடர்ந்து சீறுவது ஏன்? சீக்கியர்களுக்கு ஒரு நியாயம், தமிழருக்கு ஒரு நியாயமா? என இளந்தமிழர் இயக்கம் தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் கேள்வி எழுப்புகின்றது.
இராசீவ் காந்தி கொலை வழக்குத் தீh;ப்பில், நீதிபதி தாமஸ், நளினிக்கு இந்தப் படுகொலை நிகழவிருப்பது குறித்து முன்கூட்டியேத் தெரியவில்லை என்றும், தெரிந்த போதும் அவரால் அதனைத் தடுத்து நிறுத்திப், பின்வாங்க முடியாத சூழல் நிலவியது என்றும் கூறியிருக்கிறார். (ஆதாரம்: இராசீவ் காந்தி கொலை வழக்குத் தீர்ப்பு, 1999 SCC (Cr) பக்கம் 787-788). நீதிபதி தாமஸ் அவர்களின் இந்த வாதத்தை புறந்தள்ளி விட்டு, நளினி தான் இராசீவ்காந்தியைத் திட்டமிட்டுக் கொன்றவர் என்பது போல சித்தரிக்க முயலும், தமிழகக் காங்கிரஸ் கட்சியினர் உண்மையான குற்றவாளியை மறைப்பதற்குபு துணை போகின்றனரா என்ற கேள்வி எழுகின்றது? இராசீவ் கொலை விசாரணையில் பலரை இன்னும் விசாரிக்கவே இல்லை என்று விசாரத்த அதிகாரிகளே கூறியுள்ள நிலையில், தமிழகக் காங்கிரசார் யாருடைய குற்றத்தை மறைக்க நாடகமாடுகின்றனர்?
தமிழகக் காங்கிரஸ் கட்சியினருக்கு தைரியமிருந்தால், வக்கிருந்தால், தமதுக் கட்சித் தலைவரான இந்திராகாந்தியை சுட்டுக் கொன்றவர்களை தியாகிகளாக போற்றலாமா என்று முதலில் சீக்கிய இனத்தைச் சேர்ந்த பிரதமரிடம் கேள்வி எழுப்பிவிட்டு, அதன் நியாயங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கிப் பேசிய பின், நளினி விடுதலையைப் பற்றி பேசுங்கள். அதற்கு முன்பு நளினி விடுதலை குறித்து பேச தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் யாருக்கும் எவ்வித அருகதையும் இல்லை.

தோழமையுடன்,
க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர்

நாள்: 15.02.2010
இடம்: சென்னை-17.

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் ஈழத்தமிழ் அகதிகள் மீது காவல்துறையினர் கொடூரத் தாக்குதல்!

Wednesday, February 3, 2010

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் ஈழத்தமிழ் அகதிகள் மீது
காவல்துறையினர் கொடூரத் தாக்குதல்!
இளந்தமிழர் இயக்கம் கண்டனம்

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த, ஈழத்தமிழ் அகதிகள் மீது நேற்று(2.2.2009) இரவு தொடங்கி இன்று(3.2.2009) காலை வரை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியுள்ளதாக செய்திகள் வருகின்றன. மூன்று அகதிகள் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பன்னிரெண்டு பேருக்கு மேற்பட்டோர் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலர் வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடிழந்து, நாடிழந்து, உறவுகளை இழந்து நம்மை நாடி வரும் தமிழீழ அகதிகள் மீது தமிழகக் காவல்துறையினர் நடத்திய இத்தாக்குதலை இளந்தமிழர் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

செங்கல்பட்டு சிறை முகாம், அடக்குமுறைகளின் கொட்டடியாகவே காலங்காலமாக திகழ்ந்து வந்துள்ளது. அகதிகளை இவ்வாறான தனித்த முகாம்களில் சிறைவைத்து, அவர்களது குடும்பங்களிடமிருந்து அவர்களை பிரித்து வைத்திருப்பது, ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ள அகதிகள் பிரகடனங்களை மீறுகின்ற செயலாகும். இந்நிலையில், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதென்பது மிகக் கடுமையான, காட்டுமிராண்டித்தனமான செயலாகும். இதில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடவுச்சீட்டு இல்லாமை, அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லுதல் போன்ற சிறு சிறுக் குற்றச்சாட்டுகளின் படி கைது செய்யப்பட்ட ஈழத்தமிழ் அகதிகள் பலர் இம்முகாமில் அடைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறுகின்றது. ஆனால், இவர்களில் பலர் வழக்குகள் எதுவும் இல்லாத நிலையிலும், வழக்கு நடத்தப்பட்டு தண்டனை அனுபவித்து முடித்தப்பின்னரும் கூட, இங்கு சட்ட விரோதமாக மீண்டும் சிறைவைக்கப்பட்டுள்ளனர் என்பதே உண்மை.

இவ்வாறு சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டுள்ள சிறைவாசிகள், தமது விடுதலையைக் கோரியும், உரிமைகளைப் பெறவும் சனநாயக முறையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினால் அதற்கு காவல்துறையினரின் தடியடியின் மூலம் தான் தமிழக அரசு பதில் சொல்லுமா என கேள்விகள் எழுகின்றன.

தமிழுக்கு மாநாடு நடத்தத் தமிழக அரசு திட்டமிட்டுக் கொண்டிருப்பதெல்லாம் இருக்கட்டும். நம்மை நாடி வந்த ஈழத்தமிழ் மக்களை வாழ வைக்க முடியாவிட்டால் கூட பரவாயில்லை, அவர்களை துன்புறுத்தாமலாவது இருக்கலாம் அல்லவா? இதைக் கூட செய்யாதா தமிழக அரசு?

எனவே, ‘சிறப்பு முகாம்’ என்ற பெயரில், அரசே நடத்துகின்ற சட்டவிரோதமான சிறைக் கொட்டடிகள் உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும் என்று இளந்தமிழர் இயக்கம் சார்பில் வலியுறுத்துகிறோம். காயம்பட்டுள்ள அகதிகளுக்கு தகுந்த சிகிச்சையளிக்கப்பட்ட பின் அவர்களை மீண்டும் சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறை வைக்காமல், அவர்களது குடும்பங்களுடன் அவர்களை இணைத்து வைக்க வேண்டுகிறோம்.

தோழமையுடன்,
க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர்

இடம் : சென்னை-17.
நாள் : 03.02.2010

மாவீரன் முத்துக்குமார் நினைவு நாளில் மாற்று அரசியலுக்கு சூளுரைப்போம்!

Thursday, January 28, 2010




மாற்று அரசியலைக் கட்டியெழுப்புங்கள் என கட்டளையிட்ட
மாவீரன் முத்துக்குமாருக்கு எங்கள் வீரவணக்கம்!

ஓட்டு அரசியலைப் புறந்தள்ளி மாற்று அரசியலை கட்டமைத்து,
மாவீரன் முத்துக்குமாரின் கட்டளையை நிறைவேற்றுவோம்!
சூளுரைப்போம்!


இளந்தமிழர் இயக்கம்

அமரர் வேலுப்பிள்ளை அவர்களுக்கு இளந்தமிழர் இயக்கத்தின் வீரவணக்கம்!

Sunday, January 10, 2010


இளந்தமிழர் இயக்கத்தின் ”நெய்தல்” ஆவணப்படம் விகடன் வரவேற்பரையில்...

Saturday, January 9, 2010

மீனவர்களின் வாழ்வுரிமையைத் தடுக்கும் வகையில், இந்திய அரசுக் கொண்டு வந்த “கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம்” குறித்து இளந்தமிழர் இயக்கத்தின்

வெளியீட்டுப் பிரிவு தயாரித்த “நெய்தல்” ஆவணப்படம் குறித்த செய்தி, ஆனந்த விகடன் வார இதழின் “வரவேற்பரை” பகுதியில் வெளிவந்துள்ளது. இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் ம.செந்தமிழன் இப்படத்தை இயக்கயிருந்தார்.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

கடல் மீன்பிடி ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மைச் சட்டம் பற்றிய ஆவணத் தொகுப்பே நெய்தல். இந்தச் சட்டத்தின் கெடுபிடிகள் பற்றி மிகவும் ஆணித்தரமாக எடுத்து வைக்கிறார் செந்தமிழன். மீனவர்களின் இயல்பான உரையாடல், அவர்களின் பிரச்சினைகளை நமக்குத் தெளிவாகப் புரிய வைக்கிறது. ஒரு பிரச்சினை எப்படி அணுகப்பட வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம் இந்தக் குறும்படம்.