இந்தியாவை எதிரியாக வைத்துப் போராடினால் தான் ஈழம் சாத்தியம் - இளந்தமிழர் இயக்கம்

Thursday, March 4, 2010


புலம் பெயர்ந்த தமிழர்களும், தமிழ்நாட்டு மக்களும், தமிழீழ மக்களும் இணைந்து இந்தியாவை எதிரிப் பட்டியலில் வைத்துப் போராடினால் தான் ஈழம் சாத்தியம் என்று இளந்தமிழர் இயக்கம் கூறியுள்ளது.

தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகும், “தமிழன் தொலைக்காட்சி”யில் கடந்த ஞாயிறன்று(29.03.2010) ஒளிபரப்பான பேட்டி ஒன்றில், இளந்தமிழர் இயக்கம் சார்பில் கருத்துரைத்த அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி இதனை தெரிவித்துள்ளார்.

இந்நேர்காணலில் அவர் பேசியதாவது:

கேள்வி: இந்த அழிவுக்குப் பிறகு ஒரு மயான அமைதி. தமிழகத்தில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழுகின்ற இடத்திலெல்லாம் ஒரு அமைதி. இத்தனை ஆண்டுகாலம் முன்னெடுத்துச் சென்றத் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற தெரியாத சூழல். விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி. இதற்குப் பிறகு இந்த இயக்கம் என்னவாகும்? இந்த இயக்கம் இதுவரைக்கும் முன்னெடுத்துச் சென்று தனித்தமிழீழம் என்ற கொள்கை என்னவாகும் என்ற கவலை உலகத் தமிழர்களிடையே இப்போது இருக்கிறது. இவ்வளவு தூரம் வந்த விடுதலைப் போராட்டத்திற்கு எப்பொழுதும் முற்றுப்புள்ளி கிடையாது. எங்கிருந்தாவது ஒரு பொறி கிளம்பும் அது வரலாறு. இம்மாதிரியான மயான அமைதி தெரிகின்ற சூழலில் எங்கிருந்து அந்தத் தீப்பொறி எப்படி, எப்பொழுது கிளம்பும்? ஈழத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

அருணபாரதி: அந்தத் தீப்பொறி கிளம்ப வேண்டிய இடம் தமிழ்நாடு தான். உலகத்தமிழர்களின் தாய்த் தமிழகம் இது. உலகத்தமிழர்கள் எல்லோருக்கும் ஒரு தாய் இது. தாய் தான் கதறி அழ வேண்டும். அங்கு 35,000 மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரு மிகப்பெரும் படுகொலையை, இனப்படுகொலையை இந்த இனம் சந்தித்திருக்கிறது. அதற்கான நீதியை கேட்க வேண்டிய தமிழீழ மக்கள் இப்பொழுது அகதிகளாக அங்கு இருக்கிறார்கள். அவர்கள் கேட்கவில்லை என்றாலும், அதற்கான நீதியை தமிழ்நாட்டுத் தமிழர்கள் அந்த நீதியைக் கேட்டாக வேண்டும்.

இது ஒரு ஆழ்கடல் அமைதி. இது மயான அமைதியல்ல. சுனாமி வருவதற்கு முன்னாலும், அந்தக் கடல் அவ்வளவு அமைதியாக இருக்கும். பின்வாங்கும். அது பின்வாங்கியப் பிறகு தான் ஒரு மிகப்பெரும் சுனாமியாக வந்து ஊரையே அழித்துவிடும். அம்மாதிரியான ஒரு பின்வாங்கல் இது. தற்காலிக பின்னடைவு இது. இதை வைத்து எல்லாம் முடிந்து விட்டது என்று நாம் சொல்ல வேண்டியதில்லை. இதிலிருந்து எல்லாம் ஒரு புதிய திசையில் தொடங்கியுள்ளன என்று நாம் கூறலாம்.

இன்று ஈழம் பற்றிய பேச்சை தமிழர்கள் நாம் மட்டும் பேசவில்லை. உலகம் பேச ஆரம்பித்துள்ளது. உலகத்திலுள்ள பல நாடுகள் பேசியுள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்பு, இலண்டனில் உலகத் தமிழர் பேரவை மாநாடு ஒன்று நடத்தினர். அம்மாநாட்டில் பிரிட்டிஷ் பிரதமர் கலந்து கொண்டிருக்கிறார். இவையெல்லாம் மிகப்பெரும் நடவடிக்கைகள். புலம் பெயர் மக்கள் என்ன செய்கிறார்கள் என்றால், அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு அவர்களுடைய கோரிக்கையை தெளிவாக புரிய வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இம்மாதிரியான நடவடிக்கையை தமிழ்நாட்டிலும் நாங்கள் மேற்கொள்வோம். இலங்கைத் தமிழ் மக்களின் படுகொலையை மக்களிடம் சேர்ப்போம். இப்படி சேர்த்தால் தான் தமிழ்நாட்டிலும் ஒரு எழுச்சி வரும்.

முத்துக்குமார் தொடக்கி வைத்த எழுச்சி, “போரை நிறுத்துங்கள். இந்திய அரசு தான் உங்களுக்கு எதிரி” என்று சொல்லி விட்டது, முத்துக்குமாரின் தியாகம். தமிழ்நாட்டில் புதிதாக நாம் என்ன போராட வேண்டும் என்றால், இந்திய அரசை எதிரியாக வைத்து தமிழீழத்திற்கான நியாயத்தைக் கேட்க வேண்டும். அந்த நியாயத்தைக் கேட்பதற்கான ஒரு போராட்டம், ஒரு கிளர்ச்சி. எதிரிகள் இதற்கு பல பெயர்கள் சூட்டுவார்கள். நாம் நியாயம் கேட்டாலே, அந்தக் கதறலை பார்த்துக் கூட அவர்களுக்கு உதறல் வரும். நாம் நியாயம் கேட்டாலே அவர்கள் பயப்படுவார்கள். அப்படிப்பட்ட ஒரு காலத்தை உருவாக்க வேண்டும்.

இவ்வகையில் தமிழ்நாட்டு மக்களும், புலம்பெயர்ந்த மக்களும், தமிழீழ மக்களும் ஒன்றிணைந்து ஒரு போராட்டத்தின் மூலம் ஈழத்தை நிச்சயமாக அமைக்க முடியும். நம் காலத்திலேயே ஈழத்தை நாம் காண முடியும்.
இவ்வாறு அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.


நேர்காணலை முழுமையாகக் காண இங்கு சொடுக்குங்கள்.



Read more...