ஏர்டெல் சேவைகளைப் புறக்கணிப்போம் - தமிழின உணர்வாளர்கள் சூளுரை!

Friday, June 11, 2010

ஈழத்தில் தமிழினத்தைப் படுகொலை செய்த சிறிலங்க அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அங்கு செல்பேசி சேவையை நடத்திவரும் ஏர்டெல் நிறுவனத்தின் சேவையை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரும் பிரகடனத்தை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு. பழ.நெடுமாறன் வெளியிட்டார்.

ஏர்டெல் நிறுவனத்தின் செல்பேசி சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் புறக்கணிக்கக் கோரும் போராட்டத்தை வலியுறுத்தி சென்னை, சைதாப்பேட்டையில் நேற்று(11.06.2010) மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மே 17 இயக்கம், தமிழினப் பாதுகாப்புக் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பழ.நெடுமாறன், ஏர்டெல் நிறுவன சேவைகளை ஏன் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதை விளக்கினார்.

“தமிழினத்தின் துயரத்தைப் பொருட்படுத்தாமல், சிங்கள இனவெறி அரசால் இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு, சின்னாபின்னமாகி சிதறடிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு நியாயம் தேடாமல், சிங்கள இனவெறியன் ராஜபக்சவுடன் கை குலுக்கி தங்கள் வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்ளச் சென்ற ஃபிக்கி அமைப்பின் நடவடிக்கையை எதிர்க்கும் வகையில், அந்த அமைப்பின் தலைவராக உள்ள ராஜன் பார்த்தி மிட்டல் தலைமை செயல் அலுவலராக இருக்கும் ஏர்டெல் நிறுவனத்தின் செல்பேசி, அகண்ட அலைவரிசை, இணையத் தளத் தொடர்பு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.

இதேபோல், சிறிலங்க சிங்கள இனவெறி அரசுடன் சேர்ந்துகொண்டு இலங்கைக்குச் சென்று வணிகம் செய்யும் நிறுவனங்கள் எதுவாயினும், அந்நிறுவனங்களின் பொருட்களை தமிழர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்க வேண்டும்.

ஏர்டெல் சேவையை பயன்படுத்தும் தமிழர்கள், அதைப் புறக்கணித்துவிட்டு வேறு சேவைக்கு மாறிட வேண்டு்ம. அதனை சக தமிழர்களிடம் கூறி, அவர்களையும் ஏர்டெல் சேவையை புறக்கணிக்குமாறு வலியுறுத்த வேண்டும்” என்று நெடுமாறன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலர் விடுதலை இராசேந்நதிரன், டப்ளினில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தால் போர்க் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒரு நாட்டுடன் இணைந்து வணிகம் செய்வது மட்டுமின்றி, அந்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த அங்கு திரைப்பட விழாவையும், வணிக மாநாட்டையும் நடத்தும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் நடவடிக்கைக்கு தக்க பாடம் புகட்ட, இப்படிப்பட்ட புறக்கணிப்பு போராட்டங்கள் அவசியம் என்றார்.

ஏர்டெல் நிறுவனத்தின் செல்பேசி சேவையை புறக்கணிக்குமாறு நடத்தப்படும் இந்தப் போராட்டத்திற்குப் பிறகும், இலங்கையில் தனது சேவையை ஏர்டெல் தொடருமானால், அந்த நிறுவனத்தின் விளம்பரங்களை நீக்கும் போராட்டத்தில் தமிழர்கள் ஈடுபட வேண்டும் என்று தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் தோழர் தியாகு கூறினார்.

தமிழர்களின் நலனைப் புறக்கணித்துவிட்டு இந்திய பெருநிறுவனங்கள் இலாப நோக்கை மட்டுமே கருத்தில் கொண்டு நீண்ட காலமாகவே செயல்பட்டு வருகிறது என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற இதழாளர் கா.அய்யநாதன், இலங்கையில் போர் நடந்தபோதே 2008ஆம் ஆண்டில் அங்கு தனது சேல்பேசி சேவையை ஏர்டெல் துவக்க அனுமதி பெற்றதற்குக் காரணம், அது தமிழர்களுக்கு எதிரான போருக்கு சிறிலங்க அரசிற்கு நிதியுதவி செய்ததே என்று செய்தி வந்ததை சுட்டிக்காட்டினார்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் பேசுகையில், 2000வது ஆண்டில் இந்தியாவிற்கும், சிறிலங்க அரசிற்கும் இடையே கையெழுத்தான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு்ப பிறகு இந்திய நிறுவனங்கள் பெருமளவிற்கு இலாபமடைந்தன. அதன் பிறகு சிறிலங்காவை நோக்கி பல நிறுவனங்கள் படையெடுத்தன. அங்குள்ள வணிக வாய்ப்புகளால் உற்சாகமுற்ற இந்திய நிறுவனங்கள் சிறிலங்க அரசின் போருக்கும் மறைமுகமாக உதவின. அந்த அடிப்படையில்தான் ஏர்டெல் அங்கு தனது சேவையைத் துவங்க அனுமதி பெற்றது. அப்போதும் ஃபிக்கி அமைப்பு வணிக உறவுகளுக்கு பாலமாக இருந்தது, இப்போதும் அதுவே முன்னணியில் இருந்து செயல்படுகிறது என்று கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, இன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்யப்படும் என்றும், கருப்பு ஜூலை தினமான 25ஆம் தேதியன்று ஏர்டெல் செல்பேசியின் சிம் கார்டுகளை உடைத்து அந்த நிறுவனத்திற்கு அனுப்பப்படும் என்று கூறினார்.

Read more...

வட இந்தியப் பொருளாதார புறக்கணிப்புப் போராட்டம் நடத்துவோம்!

Thursday, June 3, 2010


இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பின் (ஃபிக்கி) ஆதரவுடன் இந்திய சர்வதேச திரைப்படக் கழகத்தின் (ஐஃபா) விருது விழா நடந்தால், அதில் கலந்துகொள்ளும் நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் துவங்கும் என்று தமிழ் இன உணர்வாளர் அமைப்புகள் எச்சரித்துள்ளன.

நேற்று மாலை கொழும்புவிலுள்ள சுகந்ததாச அரங்கில் இந்திய சர்வதேச திரைப்படக் கழகத்தின் (India International film Academy - IIFA) விருது வழங்கு விழா நடைபெற்றது. இந்த விழாவைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு (ஃபிக்கி) ஏற்பாடு செய்துள்ள உலக வர்த்தக மாநாடு (Global Business Conclave) நடைபெறுகிறது. மூன்றாவது நாள் பாலிவுட் நட்சத்திரங்களைக் கொண்ட கிரிக்கெட் அணிக்கும், சிறிலங்க கிரிக்கெட் அணிக்கும் இடையே ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது.

கொழும்புவில் நடைபெறும் இந்த விழாவை புறக்கணிக்குமாறு தமிழர் அமைப்புகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இவ்விழாவிற்கான தூதராக பணியாற்றிவந்த இந்தி நடிகர் அமிதாப் பச்சன் விலகினார். அவருடைய மகன் அபிஷேக் பச்சன், அவருடைய மனைவி ஐய்வர்யா ராய், சாருக்கான் உள்ளிட்ட இந்தி திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தமிழர்களின் உணர்வுகளை மதித்து விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த விழாவிற்கும், அதனை நடத்த ஆதரவளித்துவரும் ஃபிக்கி அமைப்பையும் கடுமையாக எதிர்த்துவரும் தமிழர் அமைப்புகள் சார்பில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று(03.06.2010) காலை நடைபெற்றது.

மே17 இயக்கம் சார்பில் இந்த செய்தியாளர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில், பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலர் விடுதலை இராசேந்திரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் தோழர் தியாகு, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, இதழாளர் கா.அய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தமிழர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், சிறிலங்க அரசு நடத்திய தமிழினப் படுகொலையை மறைக்கும் திட்டத்துடன் நடைபெறும் ஐஃபா திரைப்பட விழாவும், நாளை உலக வர்த்தக மாநாடும் கொழும்புவில் நடைபெறுமானால், அந்த விழாவில் பங்கேற்கும் நடிகர், நடிகைகளையும், அவர்கள் நடிக்கும் திரைப்படங்களையும் தென்னகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அறிவித்திருப்பதைப் போல, உலக வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கையில் வர்த்தகம் செய்யச் செல்லும் நிறுவனங்களின் பொருட்களை தமிழர்கள் புறக்கணிக்கும் நிலை ஏற்படும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
கொழும்புவில் உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டை நடத்தி அதன் மூலம் இந்திய நிறுவனங்கள் அங்கே முதலீடு செய்து வணிகம் செய்ய முற்படுவது இலாப நோக்கை மட்டுமே கொண்டு செயல்படுவதாகும் என்றும், இதில் நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility) என்ன ஆனது என்று இதழாளர் க.அய்யநாதன் கேள்வி எழுப்பினர்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்க அரசு போர்க் குற்றம் இழைத்துள்ளது, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இழைத்துள்ளது என்று டப்ளினில் விசாரணை நடத்திய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent Peoples Tribunal) கூறியுள்ளதையும், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தத் தவறிய சிறிலங்க அரசின் நடவடிக்கையைக் கண்டிக்கும் விதமாக அந்நாட்டுப் பொருட்களுக்கு அளித்துவந்த வரிச் சலுகையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையையும் சுட்டிக்காட்டிய தமிழர் அமைப்பு பிரதிநிதிகள், இதையெல்லாம் பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் அங்கு சென்று வணிகம் செய்வதிலும் இலாபம் ஈட்டுவதிலும் மட்டுமே குறியாகவுள்ள வர்த்தக நிறுவனங்களின் செயல்பாடு கண்டனதிற்குரியது என்று இக்கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

எனவே, இன்று கொழும்புவில் ஃபிக்கி ஏற்பாடு செய்துள்ள உலக வர்த்தக மாநாடு திட்டமிட்டபடி நடைபெற்றால், ஃபிக்கியின் பல்வேறு அமைப்புகளில் பொறுப்பு வகிக்கும் நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிப்பு செய்யுமாறு போராட்ட அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பொருளாதார புறக்கணிப்பு போராட்டத்தை அடுத்த வாரம் சென்னையில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் வெளியிடுவார்கள் என்றும், குறிப்பாக ஃபிக்கி அமைப்பின் தலைவராக உள்ளவர் ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக உள்ளதால், அந்த நிறுவனத்தின் செல்பேசி சேவையைப் புறக்கணிக்குமாறு அறிவிக்கப்படும் என்றும் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Read more...