துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம்!

Sunday, July 25, 2010

சிங்கள இனவெறி அரசுடன் இணைந்து செயல்படும் ஏர்டெல் தொலைத் தொடர்பு நிறுவனத்தை புறக்கணிக்கும் போராட்டம் சென்னையில் நேற்று(25.07.2010) தொடங்கி வைக்கப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு நடந்த இப்போராட்டத்திற்கு தமிழினப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் அமைப்பாளர் இதழாளர் க.அய்யநாதன் தலைமை தாங்கினார். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் ஐயா. பழ.நெடுமாறன் ஏர்டெல் கைபேசி சிம்கார்டு ஒன்றை உடைத்து வைத்து ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டத்தை துவக்கி வைத்தார். புறக்கணிக்கப்பட்ட ஏர்டெல் கைபேசி சிம்கார்டுகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு முன்பு குவிக்கப்பட்டிருந்தன.

மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், ஏர்டெல் நிறுவனத்தை நாம் புறக்கணிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, இப்போராட்டம் ஒரு துவக்கமே என்றும் வடநாட்டு நிறுவனங்கள் இவ்வாறு செயல்படுவதை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த வே.பாரதி, வீதி தோறும் இப்புறக்கணிப்பை நாங்கள் வலியுறுத்துவோம் என்று பேசினார்.




தொடர்ந்து, பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், தமிழக பெண்கள் செயற்களத்தின் அமைப்பாளர் வழக்கறிஞர் கயல்விழி, இதயக்கனி இதழ் ஆசிரியர் விஜயன், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த சரவணக்குமார், ஓவியர் வீரசந்தானம் ஆகியோர் கலந்து கொண்டு ஏர்டெல் புறக்கணிப்பிற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துப் பேசினார்.


இக்கூட்டத்தின் வாயிலாக, ஏர்டெல் கைபேசி சேவைகளை புறக்கணிக்க விரும்புவோர் அந்த சிம்கார்டுகளை வரும் செப்டம்பர் 27 திலீபன் நினைவு நாளுக்குள் அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

Read more...