இந்தியாவை நம்பினால் நம்மை யாரும் காப்பாற்றமாட்டார்கள் - இளந்தமிழர் இயக்கம்

Thursday, May 20, 2010


“இந்தியாவை நம்பினால் நம்மை யாரும் காப்பாற்றமாட்டார்கள்” என இளந்தமிழர் இயக்கம் சார்பில், இணையதளத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்துரைத்த அவ்வியக்கத்தின் செயற்குழு உறுப்பினர் ம.செந்தமிழன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலிருந்து வெளியாகும் குமுதம் இதழின் இணையதளத் தொலைக்காட்சியாக, குமுதம்.காம் இதழில், “முள்ளிவாய்க்கால் முடிவல்ல... இனி என்ன செய்வோம்” என்ற நிகழ்ச்சியில், மாணவர்கள் விவாத மேடை நிகழ்வு ஒன்றில், இளந்தமிழர் இயக்கம் சார்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போது அதனை அவர் தெரிவித்தார்.


ஈழப்போராட்டத்தின் எதிர்காலம் குறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது, அவர் பேசியதாவது:

தமிழீழ விடுதலையாக இருந்தாலும் சரி, தமிழ்த் தேசிய தமிழ்நாட்டு விடுதலையாக இருந்தாலும் சரி அதை இந்தியா என்ற ஒரு கட்டமைப்புக்கு வெளியே அல்லது இந்தியாவிற்கு எதிரானதாக இருக்க வேண்டும். ஏனென்றால் அதன் இயல்பே அது தான்.

தமிழீழ பிரச்சினையாகட்டும், தமிழ்நாட்டு தமிழர்களுக்குரிய உரிமைப் பிரச்சினைகளாகட்டும், அவை அனைத்துமே இந்தியாவுக்கு எதிரானவையாகவே இயல்பாக இருக்கின்றன. நாம் விரும்பலாம் அல்லது விரும்பாமல் போகலாம். எனவே, இந்திய எதிர்ப்பு என்பது முதன்மையான தேவை. ஏனென்றால், 1987இல் தொடங்கி 2009 வரை ஈழத்தமிழர்களை கொன்று குவித்ததில் இந்திய இராணுவத்திற்கு பங்கு இருப்பதை இந்தியாவே மறுக்கவில்லை. இதற்குப் பிறகும் நாம் இந்தியா தான் காப்பாற்றும் என்று பேசிக் கொண்டிருந்தால், நம்மை யாருமே காப்பாற்ற மாட்டார்கள்.

எனவே, புலம் பெயர்ந்த தமிழர்களாகட்டும் அல்லது தமிழ்நாட்டுத் தமிழர்களாகட்டும் தமிழ்த் தேசிய அரசியலில், தமிழீழ விடுதலையை முன்னெடுக்க வேண்டுமென்றால் முதலில் அவர்களுக்கு இந்தியாவைப் பற்றியத் தெளிவு வேண்டும். அதில் குழப்பம் கூடாது. யார் எதிரி யார் நண்பர் என்று தெரிய வேண்டும். இதுவே முதல் நிபந்தனையாக நாம் கருதுகிறோம்.

இரண்டாவது, தேர்தல் என்பது இன்றைக்கு ஒரு தொழில். அதில் ஒளிவு மறைவு தேவையில்லை. இதனை கிண்டலாகப் பேசவில்லை. அதனை ஒரு விளக்கமாகவே சொல்கிறேன். தேர்தலில் கட்சிகள் அனைத்தும் கம்பெனிகள் தான். அதில், தி.மு.க. அ.தி.மு.க. அனைத்துமே கம்பெனிகள் தான்.

என்று அவர் பேசினார்.


இவ்விவாதத்தில், சேவ் தமிழ் இயக்கத்தின் அமைப்பாளர் அருண் ஷோரி, சட்டக் கல்லூரி மாணவர்கள் சார்பாக தமிழ்க்குமரன், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சார்பாக வினோத் ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

(விரிவான பேட்டிக்கு காண்க: www.kumudam.com)

Read more...

முத்துக்குமார் சிலை திறக்க தடை: உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் கண்டனம்!

Tuesday, May 18, 2010



மாவீரன் முத்துக்குமார் சிலை திறக்க தமிழகக் காவல்துறை தடை விதித்ததற்கு உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் கடுமையான கண்டனங்களை எழுப்பியுள்ளனர்.

சிங்கள - இந்திய இனவெறி அரசுகளின் தமிழின அழிப்புப் போரின் இறுதிக்கட்டத்தின் போது, 30,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் பகுதியில் கொன்று குவித்ததை நினைவுகூறும் வகையில், இளந்தமிழர் இயக்கமும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் இணைந்து மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்பு நிகழ்வையும், முள்ளிவாய்க்கால் வீரவணக்கக் கூட்டத்தையும் 16.05.2010 அன்று நடத்தத் திட்டமிட்டன.

அதன்படி, 16.05.2010 அன்று நிகழ்வுகள் நடக்க அனைத்து வித ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்த நிலையில், பல்வேறு காரணங்களைக் காட்டி மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்புக்கும், மாணவர்கள் - இளைஞர்கள் சுடரேந்தி வரும் நிகழ்வுக்கும் காவல்துறையினர் தடை விதித்தனர்.

இதற்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தமிழ்நெட் இணையதளம் இது குறித்த செய்தியை தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.



இது தொடர்பாக, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்:

ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்துத் தன்னையே தீயில் எரித்துக்கொண்டு உன்னதமான உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமாரின் சிலையைத் திறப்பதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தஞ்சைக்கு அருகில் உள்ள செங்கிப்பட்டியில் தனியார் ஒருவர் அளித்த நிலத்தில் முத்துக்குமார் சிலையைத் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி செய்து அதற்காகக் காவல்துறையின் அனுமதியையும் பெற்றிருந்தது. ஆனால் விழா அன்று அற்பக் காரணங்களைக் கூறி சிலையைத் திறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் போன்ற பலவற்றில் தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. தனியாருக்குச் சொந்தமான இடத்தில் சிலைவைப்பதற்கு அரசின் அனுமதி தேவையில்லை. ஆனால் வேண்டுமென்றேத் திட்டமிட்டு முத்துக்குமார் போன்ற தியாக சீலர்களுக்கு சிலை நிறுவுவதைத் தடுக்க தமிழக அரசு முயற்சி செய்வது முத்துக்குமாரின் தியாகத்தை அவமதிப்பதாகும்.

தமிழருக்காகத் தன்னையே அர்ப்பணித்த முத்துக்குமாரின் சிலையை நிறுவுவதற்குரிய தடையை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, நேற்று நடந்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் பேசும் போது, முத்துக்குமாரின் சிலையை தடுத்த முதலமைச்சர் கருணாநிதி ராஜபக்சேவைவிட கொடியவர் என கண்டனம் தெரிவித்தார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளிவந்த செய்தி:


Read more...

தஞ்சையில் முத்துக்குமார் சிலை நிறுவ தமிழகக் காவல்துறை திடீர் தடை!

Monday, May 17, 2010



ஈழத்தமிழர்களுக்காக தன் இன்னுயிரைத் தீக்கிரையாக்கிய ஈகி முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில் சிலை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

கடந்த ஆண்டு மே மாதம் சிங்கள இந்திய அரசுகள் தமிழீழ மக்கள் மீது தாக்குதல் தொடுத்த, பல்லாயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் பகுதியில் கொன்றொழித்ததை நினைவு கூறும் விதமாக, முள்ளிவாய்க்கால் வீரவணக்கப் பொதுக் கூட்டம் ஒன்றை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்வின் போதே, சிலை திறப்பு நிகழ்வையும் இணைந்து மே 16 அன்று நடத்த ஏற்பாடானது. இதற்காக காவல்துறையினரிடம் முறையான அனுமதியும் பெறப்பட்டிருந்தது.
உலகெங்கும் உள்ள தமிழ் உணர்வாளர்களிடம் முத்துக்குமாருக்கு முதல் சிலை நிறுவும் நிகழ்வுக்கு ஆதரவு குவிந்தது. பல்வேறு இடங்களிலும் இந்நிகழ்வுக்கான அறிவிப்புகள் சிறப்புற செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் நிகழ்ச்சி நடக்கவிருக்கும் முன்தினம்(15.05.2010) அன்று சிலை திறப்புக்கு காவல்துறையினர் திடீர் தடை விதித்தனர். அதன் பின், மாணவர்கள் இளைஞர்கள் சுடரேந்தி வரும் சுடரோட்டம் நிகழ்வுக்கு, நிகழ்ச்சி நடக்கவிருந்த 16.5.2010 அன்று காலை அனுமதி மறுக்கப்பட்டது. கூட்டத்திற்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது. மேடையில் முத்துக்குமார் சிலையை வைப்பதற்கும் காவல்துறை தடை விதித்தது.

நிகழ்வை ஒருங்கிணைத்த தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் குழ.பால்ராசு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் ஆகியோர் இடையறாத பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்பும் கூட காவல்துறை தனது நிலையை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டது.

வீரவணக்கப் பொதுக் கூட்டம்

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தஞ்சை வந்திருந்த உணர்வாளர்கள் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட, முள்ளிவாய்க்கால் வீரவணக்கப் பொதுக் கூட்டம் மட்டும் எழுச்சியுடள் நடத்தப்பட்டது. இளந்தமிழர் இயக்கத்தினர் உணர்வாளர்களை வரவேற்று ஆங்காங்கு தண்ணீர் பந்தல்கள் அமைத்திருந்தனர்.

எழுச்சித் தமிழிசை
புதுவைச் சித்தன் செயமூர்த்தி குழுவினரின் எழுச்சித் தமிழிசையுடன் தொடங்கிய வீரவணக்கப் பொதுக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் குழ.பால்ராசு தலைமை தாங்கினார். அவர் பேசும் போது, காவல்துறையினரின் அடாவடிப் போக்கைக் கடுமையாகச் சாடினார். முத்துக்குமார் சிலையை நிறுவ சட்ட முயற்சிகளை மேற்கொள்வோம் என்றும் அறிவித்தார்.

புலவர் கலியபெருமாள் சிலை திறப்பு
தமிழ்நாட்டு விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்த புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, கரூர் ஓவியர் பரணர் தீட்டிய புலவரின் முழு உருவ ஓவியப் படத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மேற்கு மண்டலச் செயலாளர் கோ.மாரிமுத்து திறந்து வைத்துப் பேசினார்.

வீட்டுக்கு வீடு முத்துக்குமார் சிலை
அதன் பின் மேடை ஏறிய, இளந்தமிழர் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் ம.செந்தமிழன், “முத்துக்குமாருக்கு ஒரு சிலை அல்ல, ஓராயிரம் சிலைகளை நாங்கள் நிறுவுவோம். கையடக்கமுள்ள முத்துக்குமார் சிலைகளை இளந்தமிழர் இயக்கம் தானே தயாரித்து, உணர்வாளர்களிடம் பரப்பும். வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி, தம் சொந்த இடத்தில் இச்சிலை நிறுவப்படும். இதனை யார் தடுக்க முடியும்?” என்று பேசினார்.


(உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் பேசுகிறார்...)

(தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் பேசுகிறார்...)

(புலவர் புலமைப்பித்தன் பேசுகிறார்...)

(இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் பேசுகிறார்...)


(இயக்குநர் ராம் பேசுகிறார்...)


(கூட்டத்திற்கு வருகை தந்த மக்கள் திரள்...)

(முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடரை திரு. பெ.மணியரசன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் ஏற்றி வைக்கின்றனர்...)

(மகளிர் ஆயத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா பேசுகிறார்...)

(இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி பேசுகிறார்...)


(இளந்தமிழர் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் ம.செந்தமிழன் பேசுகிறார்...)





ஈகி முத்துக்குமாரின் தந்தை திரு குமரேசன் வருகை தந்து சிறப்புரையாற்றினார். அதன் பின், மகளிர் ஆயத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, முன்னாள் சட்ட மேலவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இயக்குநர் ராம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் நிறைவுரையாற்றினார்.


Read more...

முள்ளிவாய்க்கால் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நேரலை

Sunday, May 16, 2010

meenakam on livestream.com. Broadcast Live Free


நன்றி: மீனகம்.காம்.

Read more...

முத்துக்குமார் சிலை வைக்க அனுமதி மறுப்பு! வீரவணக்கக் கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும்!

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூறும் விதமாக, மாவீரன் முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சிலை திறக்க முடிவெடுத்தது அனைவரும் அறிந்ததே.
இன்று(16.05.2010) அன்று சிலை திறப்புக்கு நாள் குறித்து, அதற்கான விரிவான பரப்புரைகளை இளந்தமிழர் இயக்கமும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினரும் முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில், மாவீரன் முத்துக்குமாரின் சிலையை நிறுவ காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மாணவர்கள் இளைஞர்கள் சுடரேந்தி வரும் ஊர்வேலத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகமெங்குமிருந்து தஞ்சை வந்து கொண்டிருக்கும் உணர்வாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தவும், சிலையை நிறுவுவதை தடுப்பதிலும் காவல் துறையினர் ”மிகுந்த” அக்கறைகாட்டி வருகின்றனர்.
எனினும், திட்டமிட்டபடி முள்ளிவாய்க்கால் வீரவணக்கப் பொதுக் கூட்டம் நடைபெறும் என்றும், அதில் தலைவர்கள் கலந்து கொண்டு பேசுவர் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழர் இயக்கம்

Read more...

மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்புக்கு நோர்வே ஈழத்தமிழா அவை வாழ்த்து!

Monday, May 10, 2010

மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்புக்கு
நோர்வே ஈழத்தமிழா அவை வாழ்த்து!

ஈழத்தமிழர்களுக்காக தன் இன்னுயிரைத் தீக்கிரையாக்கிய மாவீரன் முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சிலை எழுப்புவதற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பில், நோர்வே ஈழத்தமிழர் அவை இளந்தமிழர் இயக்கத்திற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.

நோர்வே ஈழத்தமிழர் அவையின் தலைவர் வைத்திய கலாநிதி பஞ்சகுலசிங்கம் கந்தையா அவர்கள் எழுதியுள்ள அக்கடிதத்தை மகிழ்வுடன் யாம் வெளியிடுகின்றோம்.

இளந்தமிழர் இயக்க பணி சிறக்க வாழ்த்துகள்!





வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் ஏற்றி வைத்த தீயினில் உருவாகி, எம் இன விடுதலைக்கு அயராது பாடுபடும் இளந்தமிழர் இயக்கத்திற்கு நோர்வே ஈழத் தமிழர் அவையின் வணக்கம்.

வரலாற்றின் ஆதி காலம் முதல் இன்று வரை மொழி, இன, பண்பாட்டால் தமிழகமும் தமிழீழமும் ஒன்றென வாழ்ந்து வந்தாலும், முத்துகுமாரின் உயிர் தியாகம் நம் உறவின் மேன்மைக்கு புதியதோர் அத்தியாத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது. அவ்வீர இளைஞனுக்கு இளந்தமிழர் இயக்கம் நினைவு சின்னம் எழுப்புவதை முன்னிட்டு, நோர்வே ஈழத் தமிழர் அவை பெரு மகிழ்ச்சி அடைவதுடன், தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. வன்னிப் போரின் பொழுதும் இன்றும் இளந்தமிழர் இயக்கத்தின் சீர்மிகு வரலாற்றுக் கடமையினை நோர்வே ஈழத் தமிழர் அவை அறிந்தே வைத்துள்ளது.

எம் மாவீரர்களின் தியாகத்தால் தணல் விட்டு எரியும் விடுதலை தாகம், தமிழக மக்களின் உறுதுணையுடன் தான் விடை காணும் என்பதில் எமக்கு எள்ளளவும் ஐயம் இல்லை. எம் இலட்சிய தீயை அணையாமல் எடுத்து சென்றிட யாம் புதிதாக அரசியல் வழிப் போராட்டத்தை முன்னெடுத்து உலகின் மனசாட்சியை உலுக்கத் தொடங்கியுள்ளோம். எம் வரலாற்றில் முதல் முறையாக புலம் பெயர்ந்த தேசத்தில் வாழும் மக்களின் ஆணையை வாக்கெடுப்பின் மூலம் பெற்று பலம் மிக்க அமைப்பாக நோர்வே ஈழத் தமிழர் அவை செயல்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க செயலாக்கத்தைப் பற்றி எம் தமிழக உறவுகளிடையே எடுத்தியம்பி எம் விடுதலைக்கு வலு சேர்க்க இவ்வேளையில் வேண்டிநிற்கிறோம்.

மேலும், எம் அடுத்த தலைமுறையினருக்கு தமிழ்த் தேசிய சிந்தனையின் விதியினை விதைப்பது நம் போன்றோரின் கடமை என்பதனையும், கடல் கடந்து வாழ்ந்தாலும் எம் கைகள் ஒன்று சேர்ந்தால் பல பணிகளை நாம் செய்யலாம் என்பதனையும் இங்கு நினைவு படுத்துகிறோம்.
இவ்வாறு தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளந்தமிழர் இயக்கம் நன்றி

நோர்வே ஈழத்தமிழர் அவையின் வாழ்த்துக் கடிதத்திற்கு நன்றி தெரிவிப்பதோடு, தமது கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதைப் போன்று தொடர்ந்து இன விடுதலைக்காக இணைந்து செயல்படுவோம் என்றும் நாம் உறுதியளிக்கிறோம்.

குமுதம் ரிப்போhட்டரில் சிலை திறப்பு நிகழ்வு குறித்த செய்தி

தமிழகத்திலிருந்து வெளியாகும் பிரபல செய்தி வார இதழான 'குமுதம் ரிப்போர்ட்டர்” ஏடு, முத்துக்குமார் சிலை தொடர்பாக இவ்வாரம் செய்தி வெளியிட்டுள்ளது.


சிலை திறப்பு நிகழ்வு இணையத்தில் நேரடி ஒளிபரப்பு

மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்பு நிகழ்வையும், முள்ளிவாய்க்கால் வீரவணக்கப் பொதுக் கூட்ட நிகழ்வையும் இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்திட, மீனகம்.காம் இணையதளத்தினர் முன் வந்துள்ளனர். அவர்களுக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பங்களிப்பு செய்ய விரும்புவோர்க்கு...

மாவீரன் முத்துக்குமார் சிலையில் தங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் இன உணர்வாளர்கள் தமது பங்களிப்புகளை 14.05.2010 மாலைக்குள் அனுப்பி வைக்கமாறு அன்புடன் வேண்டுக் கேட்டுக் கொள்கிறோம். இதற்குரிய வங்கிக் கணக்கு எண் விபரத்தையும் யாம் இங்கு வெளியிடுகின்றோம்.

வங்கிக் கணக்கு விவரங்கள்: 

தோழமையுடன்,
க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர் இளந்தமிழர் இயக்கம்
Cell : +91 9841949462

Read more...

மாண்புமிகு தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு அவசர வேண்டுகோள்!

Wednesday, May 5, 2010


மாண்புமிகு தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு
மலேசிய தடுப்புக் காவலில் தவிக்கும் 75 ஈழஅகதிகளின்
ஒலிவடிவ கோரிக்கை
இளந்தமிழர் இயக்கத்தின் அவசர வேண்டுகோள்!

இலங்கைத் தீவில் வாழ வழியின்றி, அத்தீவைவிட்டு வெளியேறி மலேசியாவிற்கு, அகதிகளாகச் சென்ற பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 75 ஈழத்தமிழர்கள், மலேசிய அரசால் சிறைபிடிக்கப்பட்டு கோலாலம்பு+ர் விமான நிலையத்தின், குடியேற்றத் துறையினருக்குச் சொந்தமான இடத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே கடந்த 25.04.2010 அன்று, இளந்தமிழர் இயக்கத்தின் முன்முயற்சியால், சென்னையில் உள்ள மலேசியத் துணைத் தூதருக்கு, பல்வேறு தமிழ் உணர்வாளர் அமைப்புகளை ஒருங்கிணைத்து கோரிக்கை மனு ஒன்றும் அளிக்கப்பட்டிருந்தது. அம்மனுவில், தஞ்சமடைந்த அகதிகளை மலேசிய நாட்டிலேயே ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய விதிகளின்படி அகதிகளாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் அவர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தோம். இதே நோக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளும் மலேசியத் துணைத் தூதரிடம் மனு அளித்துள்ளன.

இந்நிலையில், மலேசிய அரசு தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களை அகதிகளாகப் பதிவு செய்து கொள்ள மறுத்துள்ளதுடன், அவர்களை கோலாலம்பு+ர் விமான நிலையத்தில் தடுப்புக் காவலில் வைத்துள்ளது. தடுப்புக் காவலில் உள்ள பெண்களும் குழந்தைகளும் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனிடையே, மலேசியாவில் சிக்கித் தவிக்கும் 75 ஈழத்தமிழர்கள் சார்பில், அகதிகளாக தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் கோரிக்கை மனு ஒன்றை எழுத்து வடிவில் பெறும் நோக்கில் பல்வேறு கட்ட முயற்சிகளை இளந்தமிழர் இயக்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், அவசரச் சூழலைக் கருதி அம்மக்களின் ஒலி வடிவ கோரிக்கையை இளந்தமிழர் இயக்கம் பெற்றுள்ளது. அதனை இவ்வறிக்கையுடன் யாம் வெளியிடுகின்றோம்.



மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி அவர்களுக்கு மலேசியாவில் சிக்கித் தவிக்கும் 75 ஈழத்தமிழ் அகதிகள் சார்பில் விடுக்கப்படும், இந்த அவசர ஒலி வடிவக் கோரிக்கையை, உணர்வாளர்களும், பல்வேறு அமைப்புகளும் தங்களால் இயன்ற அளவில் முயன்று தமிழக அரசிடம் கொண்டு சேர்த்து, ஈழஅகதிகளின் கோரிக்கையை உலகறியச் செய்திட முன்வருமாறும் இளந்தமிழர் இயக்கம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.

இந்த ஒலி வடிவக் கோரிக்கையை தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள தனிப்பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கும் இளந்தமிழர் இயக்கம் அனுப்பி வைக்கிறது. இந்த ஒலி வடிவ வேண்டுகோளை ஏற்று, மலேசியாவில் சிக்கித் தவிக்கும் ஈழத்தமிழர்கள் 75 பேரையும் தமிழகத்தில் அகதிகளாகப் பதிவு செய்து கொள்ளும் நோக்கிலான முயற்சியை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.

நன்றி!

தோழமையுடன்,
க.அருணபாரதி

| ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழர் இயக்கம் |

இடம் : சென்னை-17.
நாள் : 05.05.2010

Read more...