இளந்தமிழர் இயக்கம் அவசர வேண்டுகோள்!

Wednesday, July 22, 2009


செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அகதிகள் காலவரையற்ற உண்ணாநிலை
தமிழக அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்

நாள் : 23..07.09

சென்னை செங்கல்பட்டில் ஈழ அகதிகளுக்கான சிறப்பு முகாம் ஒன்று உள்ளது. 1993 ஆம் ஆண்டு இம்முகாம் தொடங்கப்பட்டது. தமிழீழ மக்களுக்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்களும் மருந்துகளும் அனுப்ப முயன்றாதாக “குற்றம்”சாட்டப்பட்டவர்கள் உட்பட சுமார் 85 பேர் இம்முகாமில் தற்பொழுது அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள வதை முகாம் இது என்றும், சிங்களர்களை விட இங்குள்ள தமிழ்நாட்டு அரசு தங்களைக் கொடுமையாக நடத்துவதாகவும் முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் வேதனையுடன் கவலைத் தெரிவித்து இது குறித்து நமக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

பிணையில் சிறையிலிருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தாலும் கூட, தமிழக அரசு சிறையிலிருந்;து வெளிவந்தவர்களை வெளியில் விடாமல் தனி முகாமிட்டு மீண்டும் மறைமுகமாக சிறைப்படுத்தி இம்முகாமில் வைத்திருக்கிறது. இவர்களில் பலருக்கு வழக்கு முடிந்து விட்ட போதும் முகாம் அதிகாரிகள் அவர்களை வெளியில் விடாமல் சட்டத்திற்கு புறம்பான வகையில் அவர்கைள சிறைப்படுத்தி வைத்துள்ளனர். வழக்கு முடியாதவர்கள் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவ்வழக்கை தனியாக நடத்தவும், அதற்கான ஒத்துழைப்பை அரசிற்கு நிச்சயம் அளிப்போம் என்றும் உத்திரவாதமும் தருகின்றனர்.

மேலும், அம்முகாமில் உள்ள பலர் தங்கள் உறவுகளை அண்மையில் நடந்த ஈழப்போரின் போது இழந்துள்ளனர். அதில் பாதிக்கப்பட்டு பலர் மனநோயாளிகளாகவும் மாறிவிட்டனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்ன்றன. தற்பொழுது நோயாளிகளாக உள்ளவர்களைத் தவிர மிதம் உள்ள 60 பேர் தங்களை விடுவிக்கக் கோரி முகாமிற்குள்ளேயே நேற்று(22.07.09) காலையிலிருந்து காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஞாயமான அவர்களது இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று(22.07.09) மாலை சென்னை சைதாப்பேட்டையில் தமிழர் ஒருங்கிணைப்பு சார்பில் நடத்தப்பட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் த.செ.மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, பத்திரிக்கையாளர் திரு. அய்யநாதன் உள்ளிட்டோர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு தீர்மானத்தை வழிமொழிந்துள்ளனர்.

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு உரிமைகளை மீட்டுத் தருவோம் என்று உறுதி கூறும் தமிழக அரசு, அவ்வுரிமைகளை முதலில் தனது அரசின் கீழ் உள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு அளிக்க வேண்டும். எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அகதிகளை முகாமிலிருந்து விடுவிக்க வேண்டும் என இளந்தமிழர் இயக்கம் சாhபில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், முகாமிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்களுக்குத் தகுந்த வாழ்வாதாரங்களையும் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இடம் : சென்னை -17.

தோழமையுடன்,
க.அருணபாரதி,
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்.

Read more...

அறிக்கைகளின் அரசியல்: இணையதளங்களுக்கு இளந்தமிழர் இயக்கத்தின் அவசர வேண்டுகோள்!

Wednesday, July 15, 2009


அறிக்கைகளின் அரசியல்: இணையதளங்களுக்கு இளந்தமிழர் இயக்கத்தின் அவசர வேண்டுகோள்!

இன அழிப்பு உச்சத்தை எட்டிய 19/5 க்குப் பிறகு தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களைப் பற்றியும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றியும் உலகத்தமிழர்கள் மத்தியில் பல்வேறு விதமான குழப்பங்களும் சந்தேகங்களும் உலா வருகின்றன.

பல்லாயிரக்கணக்கில் நடந்த படுகொலைகளை மறந்து விட்டு, தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்திற்குள் நாம் ஆழ்ந்து போக வேண்டும் என்று சிங்கள அரசு விரும்பியவாறே தற்பொதைய நிலவரங்கள் உள்ளன.

மேலும், இயக்கத்தில் உள்ளதாக சொல்லப்படும் சில தலைவர்களின் அறிக்கைகள், “போராளிகள்” என அடையாளப்படுத்தப்படும் சிலரது கட்டுரைகள் சிங்கள அரசின் உளவுத்துறைக்கு நேரடியாகவே துணைபோவதாக நாம் கணிக்கிறோம். ஏற்கெனவே இது, இந்திய “றோ” உளவுத்துறையின் சதியாக இருக்கலாம் என்ற செய்தி “அதிர்வு”, “நெருடல்” இணையதளங்களால் எழுப்பப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

ஆயுதப் போராட்டம் நடத்தியது தவறு என்று சொல்வதும், இயக்கத்தின் கடந்த காலத் தவறுகள் குறித்து பட்டியலிடுவதுமாக சில கட்டுரைகள் கூட வெளிப்பட்டன. இயக்கத்திற்குள் நடைபெற வேண்டிய விவாதங்கள் பொது விவாதங்களாக்கப்பட்டுள்ளன. அதற்கு மிகச் சமீபத்திய உதாரணம், நெருடல் இணையதளத்தில் வெளியான “இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற” என்ற கட்டுரை. இயக்கத்தின் மீது சேறடிக்கும் விமர்சனங்களை எழுப்பும் அக்கட்டுரை பொது விவாதத்தளத்திற்கு விடப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது. அக்கட்டுரையில்,

· தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவு பலவீனப்பட்டிருந்தது,

· புலிகள் இயக்கத்தின் சகல மட்டங்களிலும் சிங்கள உளவுப்பிரிவினர் ஊடுருவியிருந்தனர்,

· சமாதானக் காலத்தில் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் வழி சொகுசு வாழ்க்கைப் பழக்கப்படுத்தப்பட்டது,

· இயக்கத்திற்குள் சிங்கள இராணுவம் ஊடுருவல்,

· கட்டாய ஆள் சேர்ப்பு உள்ளிட்ட எண்ணற்ற விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவை குறித்து நேரடியாக எந்தக் கருத்தையும் வெளியிடுவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தவிர வேறு யாருக்கும் உரிமையிருக்க முடியாது.

ஏனெனில் இவை அனைத்தும் இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்த உள்ளரங்கத் திறனாய்வுச் செய்திகள். இவை உண்மையா பொய்யா என்பதல்ல எமது அக்கறை. தமிழீழ விடுதலைப்புலிகள் குறித்து எதிர் முகாம் மேற்கொள்ளும் வழமையான அவதூறு பரப்பலின் அனைத்து அம்சங்களும் இந்த ஒரேக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளதை நாம் கவனிக்க வேண்டும். எழுதியவர் நோக்கத்தைக் குறித்து நாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதே வேளை, இக்கட்டுரை ஏற்படுத்தும் விளைவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இன்று சந்தித்திருக்கும் பின்னடைவு அவ்வியக்கம் கடந்த காலத்தில் செய்த தவறுகளின் விளைவு என்று பரவலாக பரப்புரை செய்யப்படுகின்றது. இப்படி செய்பவர்கள் அனைவரும் ஈழத்தில் இன அழிப்பு நடந்ததையோ இன்றும் முகாம்களில் விலங்குகளை போல அடைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் தமிழர்களின் வாழ்வை குறித்தோ அநியாயமாக திருப்பி அனுப்பப்பட்ட “வணங்காமண்” கப்பல் குறித்தோ எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்காதவர்கள் என்பதும், இவர்கள் அனைவரும் இலங்கையிலும் தமிழகத்திலும் அரசதிகாரத்தின் ஒட்டுக் குழுக்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் நாம் அறிந்த செய்திகள். இந்நிலையில் இயக்கத்தின் மீது போகிற போக்கில் விமர்சனங்களை வீசும் மேற்கண்ட கட்டுரை இயக்கத்தின் ஆதரவு முகாமிலிருந்தே வெளியிடப்பட்டிருப்பது ஒட்டுக் குழுக்களுக்கு ஊட்டமளிக்கும் செயலாக அமைந்து விடும்.

ஏசியன் ட்ரைபியுன்” இணையதளம் நேற்று(22.06.09), தலைவர் பிரபாகரனை படுகொலை செய்தது பொட்டு அம்மானாகவே இருக்க முடியும் என்ற பொருளில் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக புலிகளின் புலனாய்வுப் பிரிவு செயல்பட்டது என்று கட்டுரை வெளியிட்டுள்ளது. இச்செய்தியை சிங்கள இராணுவம் வெளியிட்டதாக “ஏசியன் ட்ரைபியுன்” குறிப்பிட்டுள்ளது. இந்தக் கட்டுரை தமிழகத்தில் தினத்தந்தி நாளிதழில் விரிவாகவே வெளியிடப்பட்டுள்ளது. ஆக, பொட்டு அம்மான் மீதும் புலிகளின் புலனாய்வுப்பிரிவின் மீதும் தமிழர்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி தொடங்கப்பட்டதை நாம் உணர முடிகின்றது.

இந்தப் பின்னணியில் நெருடல் இணையதளம் வெளியிட்ட கட்டுரை தெரிந்தோ தெரியாமலோ சிங்கள உளவுத்துறையின் சதியின் ஒரு பகுதியாக மாறும் ஆபத்திருக்கிறது.

இது போன்ற சூழல்களை தவிர்ப்பது போராடும் இனத்திற்கு தேவையான அடிப்படை ஒழுங்கு என்று நாம் கருதுகிறோம். எந்த இயக்கமும், தலைமையும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டது அல்ல. ஆனால், விமர்சனம் செய்யப்படுவதற்கென்று களமும் காலமும் இருக்கின்றது. இணையதளங்கள் அதற்கான களமல்ல. இது அதற்கான காலமும் அல்ல. இதை ஒரு தீவிர சிக்கலாகவே கணக்கில் எடுத்துக் கொண்டு தமிழர் இணையதளங்கள் செயல்பட வேண்டும் என்று வேண்டுகிறோம்.

தோழமையுடன்,
க.அருணபாரதி,
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்

Read more...